
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு நகரத்தையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் தூய்மை மாறாமல் பராமரித்து டெங்கு, தொற்றுநோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வேலைத்திட்டம் தொடக்கி வைக்கப்பட்டிருப்பதாக அம்மாநகர சபையின் உறுப்பினரும் சுகாதார நிலையியற் குழுவின் தலைவருமான சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரச் சூழலை சுத்தமாகப் பேணும் திட்டம் மட்டக்களப்பு பெரியஉப்போடை வாவியை அண்டியுள்ள பகுதிகளில் புதன்கிழமை 29.01.2020 இடம்பெற்றது.
சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்ற நகர தூய்மை பேணும் நடவடிக்கையில் பிரதேசத்திலுள்ள வாவிக்கரைகள், நீரோடைகள், சதுப்பு நிலப்பகுதிகளிலுள்ள புதர்கள், சாக்கடைகள், தரிசு நிலங்கள், பாழடைந்த கிணறுகள் என்பன துப்புரவாக்கப்பட்டதோடு அகற்றப்பட்ட கழிவுகள் தரம்பிரிப்பு நிலையத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டன.
டெங்கு ஒழிப்பு, தொற்று நோய்கள் விழிப்புணர்வு, நகரத் தூய்மைப் பணிகள் மட்டக்களப்பு நகரமும் அதனை அண்டிய பகுதிகளிலும் கிரமமாக இடம்பெறும் என்று பாக்கியநாதன் மேலும் தெரிவித்தார்.




No comments: