News Just In

1/27/2020 07:15:00 PM

வாகரையில் கறுவா பயிர்ச் செய்கை துளிர்விடத் துவங்கியுள்ளது


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு – வாகரை பிரதேசம் கறுவா பயிர்ச் செய்கைக்கு உகந்த இடமாக தற்போது அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக கட்டுமுறிவு விவசாய அமைப்பின் பொதுச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் தெரிவித்தார்.

ஏற்றுமதிப் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில் விவசாயத் திணைக்களத்தினால் வாகரைப் பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட 15 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தலா 250 கறுவா கன்றுகளை அவ்விவசாயிகள் பயிரிடத்துவங்கியுள்ளதாகவும் அப்பயிர்கள் தற்போது செழித்து வளரத் துவங்கியுள்ளதாகவும் குருகுலசிங்கம் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக திங்கட்கிழமை; 27.01.2020 மேலும் கருத்துத் தெரிவித்த மூத்த விவசாயியும் சமூக சேவையாளருமான குருகுலசிங்கம், வாகரைப் பிரதேசத்து மண் வளம் கறுவா செய்கைக்கும் உகந்ததாக இருப்பது ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் 2013ஆம் ஆண்டிலிருந்தே வாகரை பிரதேசத்தில் ஏற்றுமதிப் பயிரான கறுவாவை பயிரிடுவது பரீட்சார்த்மாகத் தொடங்கியது.

அப்போது சிறிய அளவில் வீட்டுக் ஒன்றிரண்டு என்று  நாட்டப்பட்ட கறுவா மரங்கள் சிறந்த வளர்ச்சியைக் காட்டியதால் இப்போது வருமானம் ஈட்டக்கூடிய விதத்தில் ஒரு விவசாயிக்கு தலா 250 கறுவாக் கன்றுகள் விவசாயத் திணைக்களத்தினால் தரப்பட்டுள்ளன.

இவை தற்போது சிறப்பாக வளர்ந்து துளிர்விடத் துவங்கியுள்ளதால் வாகரை பிரதேசத்தில் கறுவா செய்கை வெற்றியளிப்பதோடு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசம் பொருளாதார வளர்ச்சியையும் அடையும் என்று எதிர்பபார்க்க முடியும்' என்றார்.



No comments: