News Just In

11/21/2019 09:32:00 PM

ஆசிய அபிவிருத்தி வங்கியால் மட்டு மாநகரில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மாநகருக்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பல்வேறு வேலைத் திட்டங்களின் சாத்தியவளம் பற்றிய கலந்துரையாடலானது மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இன்று வியாழக்கிழமை (21.11.2019) மாநகர முதல்வரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

மாநகர முதல்வரின் 1000 நாள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 1800 மில்லியன் ரூபாய் நிதி அனுசரணையில் 11 வேலை திட்டங்களுக்கான அனுமதிகள் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன.

இதன்படி நகர மத்தியில் விற்பனைத் தொகுதியுடன் கூடிய நவீன கடைத்தொகுதி, வாவிக்கரை ஓரமான நடைபாதையமைப்பு, சூரிய மின்கலத்துடன் கூடிய வாகன தரிப்பிடம், கலாசார கேட்போர் கூடம், மாநகர அலுவலக கட்டிடம், நாவற்குடா பொதுச்சந்தை புனரமைப்பு, சின்ன ஊறணியில் வர்த்தக மண்டபம் மற்றும் நீர் வடிந்தோடும் வகையில் தோணாக்களைப் புனரமைத்தல் என பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளும் நோக்கிலும் அதன் சாத்தியவளம், செலவு விபரங்கள் தொடர்பில் தெளிவுறும் வகையிலும் மேற்படிக் கலந்துரையாடல் அமைந்திருந்தது.

இக்கலந்துரையாடலில் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் திட்டப் பணிப்பாளர் காமினி விஜயவர்த்தன, மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சி.பிரகாஸ், மாநகர பொறியிலாளர் சித்திராதேவி லிங்கேஸ்வரன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments: