
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தாக்கல் செய்த ஊழல் தொடர்பான குறித்த வழக்கின் விசாரணை இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இதன்போது, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களான வசந்த கரன்னகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
இந்தநிலையில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர், இவ்வழக்கை விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடலுக்காக அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்குத் தேவையான தகுதிகள் இல்லாத போதிலும், அவரை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள றோயல் கடற்படைக் கல்லூரியில் பயிற்சிக்கு அனுப்பியதன் மூலம் ஊழல் குற்றம் இழைக்கப்பட்டதாகக் கூறி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: