
நாட்டின் 50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் (MOH) தொடர்ந்தும் டெங்கு அதிஅவதான வலயங்களாக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்கள் தொடர்பான அண்மைய தரவுகளை வெளியிட்டுள்ள தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு, இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, 2026 ஆம் ஆண்டில் இதுவரை 95,174 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 9,838 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண ரீதியில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். அங்கு இதுவரை 50,358 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து,
தென் மாகாணம் – 13,854 பேர், மத்திய மாகாணம் – 8,659 பேர், சப்ரகமுவ மாகாணம் – 7,825 பேர் என்ற அடிப்படையில் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மாவட்ட ரீதியில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு இதுவரை 20,276 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2026 ஆம் ஆண்டில் இதுவரை 72 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
No comments: