News Just In

7/17/2026 06:52:00 PM

மட்டக்களப்பு மாவட்ட காணிப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடல்..!

மட்டக்களப்பு மாவட்ட காணிப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடல்..!இரா .சாணக்கியன் 



மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு நடைமுறைசார் மற்றும் நீதியான தீர்வுகளை எட்டும் நோக்கில், மாவட்டச் செயலாளர் அவர்களின் அழைப்பின் பேரில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் பங்கேற்றேன்.

இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் காணி ஆணையாளர் நாயகம், மாகாண காணி ஆணையாளர், மாவட்டச் செயலாளர், மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் காணி நிர்வாகம், காணி உரிமைகள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் பல்வேறு காணிப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

குறிப்பாக, மக்களின் நீண்டகால காணி உரிமைப் பிரச்சினைகள், காணி ஆவணப்படுத்தல், காணி அனுமதிகள், அரச காணி நிர்வாகம் உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் நடைமுறைசார் தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை நான் வலியுறுத்தினேன்.

கலந்துரையாடலின் போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் அனைத்தும் ஒரே தன்மையுடையவை அல்ல என்பதையும் சுட்டிக்காட்டினேன். அவை பொதுவாக மூன்று வகைகளாகக் காணப்படுகின்றன. அவற்றில் சில இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளுடன் தொடர்புடைய நுணுக்கமான விடயங்களாக இருப்பதால், அவற்றிற்கு ஒரே கூட்டத்தில் உடனடி தீர்மானங்களை எடுக்க முடியாது என்பதையும் காணி ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் உள்வாங்கி விரிவான அறிக்கையொன்றை தயாரித்து சமர்ப்பிக்குமாறு காணி ஆணையாளர் அறிவுறுத்தியிருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில், நிர்வாக அதிகாரிகளின் கருத்துக்கள் மட்டுமல்லாது, மக்களின் பிரதிநிதிகளாக செயற்படும் அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் கட்டாயம் உள்வாங்க வேண்டும் என நான் வலியுறுத்தி வேண்டுகோள் விடுத்தேன். மக்களின் உண்மையான பிரச்சினைகளும், அவர்களின் எதிர்பார்ப்புகளும் பிரதிபலிக்க வேண்டுமெனில், ஜனநாயக பிரதிநிதிகளின் கருத்துக்களும் அவசியம் பதிவாக வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

மேலும், தனியார் காணிகள் தொடர்பான விவாதத்தின் போது, ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் உள்ள புளுட்டுமான் ஓடை பகுதியில் பல ஏக்கர் தனியார் காணிகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களால் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருப்பதாக நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நான் எடுத்துரைத்தேன். இவ்வளவு காலமாக இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாதமை குறித்து எனது கடும் கவலையையும் பதிவு செய்தேன்.

இதனைத் தொடர்ந்து, குறித்த காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றை உடனடியாக சமர்ப்பிக்குமாறு காணி ஆணையாளர் நாயகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அதேபோல், திராய்மடு பகுதியில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் காணி தொடர்பாக, அதற்கான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் தெரிவித்தார். அந்த விடயம் தொடர்பான விரிவான அறிக்கையையும் தாமதமின்றி சமர்ப்பிக்குமாறு காணி ஆணையாளர் நாயகம் பணிப்புரை வழங்கினார்.

அரச காணிகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, நீண்டகால குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட அரச காணிகள் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடப்பதோடு, சில சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக பயன்படுத்தப்படுகின்றமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அவ்வாறான அனைத்து காணிகளையும் மீளாய்வு செய்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேச்சல் தரை நிலங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றின் தற்போதைய நிலை, பயன்பாடு மற்றும் எதிர்கால முகாமைத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இன்று கலந்துரையாடப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் தொடர்பான விரிவான அறிக்கைகளை விரைவாக சமர்ப்பிக்குமாறு காணி ஆணையாளர் நாயகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

மக்களின் காணி உரிமைகளை பாதுகாப்பதும், சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சட்டம் சமமாக அமுல் படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதும், வெளிப்படையானதும் நீதியானதுமான காணி நிர்வாகத்தை உருவாக்குவதும் எனது தொடர்ச்சியான பொறுப்பாகும். மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நியாயமான காணி உரிமைகள் பாதுகாக்கப்படும் வரை, இந்தப் போராட்டத்தை அனைத்து சட்ட மற்றும் ஜனநாயக வழிகளிலும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வேன்.


No comments: