
அண்ணாமலையின் இயக்கம் பாஜகவின் மற்றொரு முயற்சி என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
புதிய இயக்கம் தொடங்கிய அண்ணாமலை
தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி, தனிஅரசியல் இயக்கம் தொடங்கியதாக அறிவித்துள்ளார்.
இதனை அரசியல் கட்சியாக மாற்றி, அடுத்து வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
மேலும், தான் நடத்தி வரும் we the Leaders என்ற அமைப்பில் தன்னார்வலராக இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் அறிவித்த சில நிமிடங்களில் அதில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களை இணைத்துக்கொண்டனர். தற்போது 7 மணி நேரத்தில், 7 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சியில் பாஜக சார்பில் போட்டியிட்ட கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கே.வசந்தராஜன், பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் ஆகியோர் பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலையுடன் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், அண்ணாமலையின் புதிய இயக்கம் பாஜகவின் மற்றொரு முயற்சி என காங்கிரஸ் கம்யூனிஸ்ட் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் 2501 வது அமைப்பு
இது குறித்து பதிவிட்டுள்ள CPIM மாநில தலைவர் பெ.சண்முகம், "பெயர் மாற்றம், தமிழகத்தில் பா.ஜ.க-வின் புதிய உத்தி!
ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2501 அவ்வளவுதான்.
பாஜக என்ற கட்சி தமிழக மக்களிடம் எடுபடவில்லை. எனவே, பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என்று மோடி - அமித்ஷா ஆசியுடன் முயற்சிக்கிறார் அண்ணாமலை.
ஆரம்பித்த இரண்டு மணி நேரத்தில் 2.50 லட்சம் பேர் சேர்ந்து இருப்பதாக கூறுவதெல்லாம் பாஜக கட்சியினர் இதில் இணைக்கப்படுகிறார்கள் என்பதே, அண்ணாமலை போடுவது "மாரீச மான் வேடம்" என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்" என தெரிவித்துள்ளார்
அண்ணாமலையின் புதிய இயக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், "2002 முதல் 2026 வரை அனைத்து கூட்டணிகளையும், அரசியல் பரிசோதனைகளையும் செய்து பார்த்தும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாத RSS-BJP அமைப்பின் புதிய திட்டம் தயாராகிவிட்டதா?

அமித் ஷாவின் அனுமதியுடன்,மோடியின் ஆசீர்வாதத்துடன், BJP மற்றும் RSS பெயர்கள் இல்லாத ஒரு புதிய அரசியல் முகமூடி. பெயர் மட்டும் புதிதாக இருக்கலாம். கொள்கை, கட்டுப்பாடு, நோக்கம் அதே பழையதா?
தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான “Plan B” ஆக இது உருவாக்கப்படுகிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
தமிழ்நாடு கடந்த காலத்திலும் அரசியல் வேடமாற்றங்களை அடையாளம் கண்டுள்ளது.
இனியும் பெயர் மாற்றத்தை அல்ல, உண்மையான மாற்றத்தையே மக்கள் மதிப்பிடுவார்கள். முகமூடி மாறலாம். ஆனால் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதுதான் முக்கியம்" என தெரிவித்துள்ளார்.
No comments: