இளைஞர்களின் சமூக ஊடகத் தள அணுகலைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் நாடுகளில் சமீபத்தில் மலேசியா இணைந்துள்ளது.
மலேசியாவில் உள்ள முக்கிய சமூக ஊடகத் தளங்கள் பயனர்களின் வயதைச் சரிபார்க்கவும், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்களது சமூக வலைதள கணக்குகளைப் பதிவு செய்வதைத் தடுக்க அமலுக்கு வந்தது புதிய இணையப் பாதுகாப்பு விதி. இந்தத் தேவைகள், தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் குறைந்தது எட்டு மில்லியன் பயனர்களைக் கொண்ட ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சேவை வழங்குநர்களுக்குப் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்த தளங்களுக்கு அவகாசம் வழங்கப்படும் என்று தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அதற்கான குறிப்பிட்ட கால அளவை அது குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளின் நல்வாழ்வில் சமூக ஊடகத் தளங்களின் எதிர்மறையான தாக்கம் குறித்து உலகளவில் கவலை அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களின் சமூக ஊடகத் தள அணுகலைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் நாடுகளில் சமீபத்தில் மலேசியா இணைந்துள்ளது.
"16 வயதுக்குட்பட்ட பயனர்கள் சமூக ஊடகக் கணக்குகளைப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்". அடையாள அட்டைகள் அல்லது கடவுச்சீட்டுகள் போன்ற அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பதிவுகளைச் சரிபார்ப்பது உட்பட, "வயது சரிபார்ப்பு நடவடிக்கைகளை" சமூக வலைத்தளங்கள் செயல்படுத்தும் என்று கேள்வி-பதில் ஆவணம் தெரிவித்துள்ளது.
நாட்டின் இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகளான புதிய குழந்தை பாதுகாப்பு நெறிமுறை மற்றும் இடர் தணிப்பு நெறிமுறை ஆகியவை, சமூக ஊடகங்களில் "வலுவான உள்ளடக்க நிர்வாகத்தை" கோருகின்றன. மேலும், சமூக வலைத்தளங்கள், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை தணிப்பதற்காக, புகாரளித்தல் மற்றும் பதிலளித்தல் வழிமுறைகள், விளம்பரதாரர் சரிபார்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பொருத்தமான இடங்களில் உள்ளடக்கத்தைக் குறியிடுதல்" போன்ற செயலுக்கு மற்றும் அமைப்புரீதியான நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு விதிமுறைகளையும் கடைப்பிடிக்கத் தவறினால், நிறுவனங்களுக்கு 10 மில்லியன் மலேசிய ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று எம்.சி.எம்.சி. தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதம், டிக்டாக், யூடியூப், ஸ்னாப்சாட் மற்றும் பிற முன்னணி தளங்களில் 16 வயதுக்குட்பட்டவர்களின் கணக்குகளை நீக்குமாறும் , மீறினால் பெரும் அபராதம் விதிக்கப்படும் என்றும் கட்டாயப்படுத்திய முதல் நாடாக இதற்கு முன்பு ஆஸ்திரேலியா இருந்தது. இருப்பினும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்கள் நடைமுறைக்கு வந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில், "குறிப்பிடத்தக்க அளவிலான ஆஸ்திரேலியக் குழந்தைகள்" இன்னும் தடைசெய்யப்பட்ட தளங்களைப் பயன்படுத்தி வருவதை ஆஸ்திரேலியாவின் இணையப் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
மேலும், இந்தோனேசியாவும் பதின்ம வயதினரின் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் பொறுப்பைத் தளங்கள் மீது சுமத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இணைய ஆபாசம், இணையவழி கொடுமைப்படுத்துதல் மற்றும் இணைய அடிமைத்தனம் போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து சுமார் 7 கோடி குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில், மார்ச் மாதம் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை அமல்படுத்தப்பட்டது. இந்தத் தடையானது ஆரம்பத்தில் யூடியூப், டிக்டாக், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ், எக்ஸ், பிகோ லைவ் மற்றும் ராப்லாக்ஸ் ஆகிய எட்டு "அதிக ஆபத்துள்ள" தளங்களை மையப்படுத்தி தடைசெய்தது. மேலும், இதுகுறித்து அனைத்து தளங்களும் தடையை கடைபிடிக்க உறுதியளித்துள்ளன.
15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் சட்டத்திற்கு துருக்கிய நாடாளுமன்றம் ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்தது . மேலும், நார்வே, கிரீஸ், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் டென்மார்க் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளும் இதேபோன்ற கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: