
சுகாதாரத் துறையில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், அறிவியல் இளங்கலை தாதியர் பட்டதாரிகள் 515 பேருக்கான புதிய நியமனங்கள் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (29) காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர், புதிய நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டிற்குப் பின்னர், அதாவது சுமார் 5 வருட இடைவெளிக்குப் பிறகு இத்தகைய பட்டதாரி தாதியர் ஆட்சேர்ப்பு நாட்டிற்காக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஒரு சிறப்பு மைல்கல் என அமைச்சர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
மெலும் அவர் தெரிவிக்கையில்,
சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதற்காக அரசாங்கம் கொண்டுள்ள சில முக்கிய இலக்குகளையும் அமைச்சர் இங்கு அறிவித்தார்:
எதிர்வரும் 2025 – 2029 காலப்பகுதிக்குள் மொத்தம் 13,600 புதிய தாதியர்களைப் பணியில் இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள தாதியர் பயிற்சிப் பள்ளிகளில் சுமார் 7,800 மாணவர்கள் தங்களது தொழிற்பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர்.
எதிர்கால மருத்துவத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, தேசிய தாதியர் உடற்பயிற்சிக் கல்லூரி அமைப்பின்கீழ் மேலும் 3,000 புதிய மாணவர்களைப் பயிற்சிக்கு இணைத்துக் கொள்வதற்கான முதற்கட்ட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது நாட்டின் பொதுச் சுகாதாரத் துறையில் மொத்தம் 43,553 தாதியர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
நிலவிய பற்றாக்குறையைக் குறைப்பதற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 3,441 தரம் III (Grade III) தாதியர்கள் புதிதாகச் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க, அமைச்சின் மேலதிக செயலாளர்கள், பதில் பணிப்பாளர் நாயகம், பிரதிப் பணிப்பாளர் நாயகம், இலங்கை பௌண்டேஷன் நிறுவனத்தின் தலைவர், வைத்தியசாலைப் பணிப்பாளர்கள், தாதியர் கல்லூரிகளின் அதிபர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் நியமனம் பெற்றவர்களின் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
No comments: