(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
எந்நேரமும் மக்களின் நலன் பேணும் எந்தவொரு அரசியல்வாதியையும் ஆதரிப்பதில் எந்தத் தவறும் இல்லை என பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண விநியோக ஏற்பாட்டாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற 100 வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.
ஜேர்மன் நாட்டின் முஸ்லிம் எஹெல்பென் German Muslim Ehelfen அமைப்பின் நிதி அனுசரணையில் இலங்கையிலுள்ள அஸிஷா பௌண்டேஷன் மற்றும் ஹஸனாத் அநாதை இல்லங்களின் இணைப்பாக்கத்தில் இந்த உலர் உணவு நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
அஸிஷா பௌண்டேஷனின் இணைப்பாக்கத்தில் ஏறாவூர் மஸ்ஜிதுல் ஸாலிஹீன் பள்ளிவாசலில் சனிக்கிழமையன்று 03.02.2024 அன்று இடம்பெற்ற நிகழ்வில் பொருளாதார நெருக்கடியினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை மாவு அடங்கிய சுமார் ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சுபைர், உங்கள் கிராமத்தினதும்; பிரதேசத்தினதும்; அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதாரம் கல்வி, சுகாதாரம் உட்பட இன்னும் பலவகையான அபிவிருத்திப் பணிகளைத் தேடி ஆராய்ந்து முன்னெடுக்கின்ற அரசியல்வாதிகளை பொதுமக்கள் ஆதரிப்பதில் தவறேதுமில்லை.
உங்களது கஷ்டங்களில், துன்பங்களில் பங்கெடுக்கின்றவர்கள், உங்களது காலடிக்கு வந்து அபிவிருத்திகளில் துணை நிற்கின்றவர்கள், அப்படிப்பட்ட நேர்மையானவர்களுக்குத்தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.” என்றார்.
இந்நிகழ்வில் கொடை வள்ளலும் மார்க்க அறிஞரும் அரசியல்வாதியுமான காலஞ்சென்ற ஹஸன் மௌலவியின் புதல்வன் சாதிக் ஹஸன், நிவாரண நிறுவனத்தின் தொண்டர்கள், ஊர்ப்பிரமுகர்கள், உட்பட பிரதேச பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
No comments: