News Just In

12/08/2023 12:38:00 PM

நாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நிதியானது மீள கொண்டுவரப்படுமா?இரா.சாணக்கியன்





நேற்றைய தினம் 07.12.2023 இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சு தொடர்பான விவாதத்தின் போது. “நிலைக்கால நீதி” என்ற விடயத்தில் இலங்கை அரசாங்கம் எவ்வித முன்னேற்றமும் இல்லாததாக உள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அமைச்சுப் பதவியில் இருக்கும் வரை எவ்வித முன்னேற்றமும் தமிழ் மக்களுக்கு சாதகமாக மேற்கொள்ளப்படாது என்பது உறுதியான விடயமாகும். கடந்த இரு வாரங்களிலும் நடைபெற்ற கைதுகள் மற்றும் மக்களுக்கு எதிரான நிகழ்வுகளைப் பார்க்கும் போது இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தினை செயற்படுத்தாமல் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தெளிவாக விளங்குகின்றது. இதைப் பற்றி இச் சபையில் பேசி எவ்வித தீர்வுகளும் கிடைக்கப்போவதில்லை என்பது தெரியும். இருப்பினும் அலி சப்ரி அவர்களின் செயற்பாடு சிங்கள மற்றும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு என்ன தீர்வினைப் பெற்றுக் கொடுத்துள்ளது?

 நாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நிதியானது பில்லியன் தொகையில் உள்ளது. உதாரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் 1.1 பில்லியனுக்கும் அதிகமாக கொள்ளையடிக்கப்பட்ட நிதி மீள கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் நைஜீரியா நாட்டிலும் கொள்ளையடிக்கப்பட்ட நிதி மீள கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு பல நாடுகளிலும் கொள்ளையடிக்கப்பட்ட நிதி மீள கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த வருட போராட்டத்தின் போதும் “Gota Go Home” எனவும், “சூறையாடிய பணத்தினை மீண்டும் கொடு” எனவுமே மக்கள் கோஷம் எழுப்பினர். ஒரு நாட்டின் வெளி விவகார அமைச்சரே நாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நிதியினை மீளப் பெறுவதற்கான நடவடிக்கையினை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் கோட்டபாயவிற்கு எதிரான நடவடிக்கைகளை அலி சப்ரி செய்தாரா? எனும் கேள்வி மக்கள் மத்தியில் தொடர்ந்த வண்ணமே உள்ளது. ரணில் விக்கரமசிங்க ஜனாதிபதியாக வரும் போது புலம்பெயர் தேசத்துடன் பல தொடர்புகளை மேற்கொண்டு; பல முதலீடுகளை பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது வரை ஒரு ரூபாய் நிதி கூட பெற முடியவில்லை.

அண்மையில் நடைபெற்ற Coop 28 கூட்டத்திற்கு ஜனாதிபதியுடன் இணைந்து பலர் சென்றனர். ஆனால் இவர்கள் காலநிலை பற்றிய எவ்வித அறிவினையும் கொண்டிருக்கவில்லை. அந்த துறையுடன் இணைந்த நிபுணர்களுக்கே இருக்கை இருக்கவில்லை. பாணமையில் மேற்கொள்கின்ற மண் அகழ்வினால் “Sand Dunes” மண் திட்டுக்கள் அகற்றப்படுகின்றது. அதே போல பல இடங்களிலும் சுற்று சூழல் சமநிலைக்கு பாதிப்பினை ஏற்படுத்தி சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் மண் அகழ்வின் காரணமாக கடற்கரைகளே அழிந்து போகின்றன. இதை பற்றிய கரிசனையினை உள்நாட்டினுள் எடுக்காமல் வெளிநாடுகளுக்கு என்ன இணக்கம் காண்பதற்கு இவர்கள் செல்கின்றார்கள் என்பது தெரியவில்லை. கனடா போன்ற நாடுகளுடன் இருந்த நட்புறவினை முழுமையாக நாசம் செய்துள்ளார் இவ் அலி சப்ரி.

No comments: