
முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவிற்கு சொந்தமான வீட்டில் வைத்து மிகப்பெரிய பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டா என அறியப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை தளர்த்துவதற்காக இந்த பண பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹரக் கட்டாவின் மனைவியிடமிருந்து பெறப்பட்ட 1,200 லட்சம் ரூபாயில், 200 லட்சம் ரூபாவை மீண்டும் அவரிடம் கையளிப்பதற்காக, நுகேகொடை, நாவல, விஜயபாகு மாவத்தையில் உள்ள விஜேதாச ராஜபக்சவிற்கு சொந்தமான வீட்டில் வைத்து இந்த பரிமாற்றம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் உதவி சட்டப் பணிப்பாளர், சட்டத்தரணி அனுஷா சம்பந்தப்பெரும நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
உரிய பணப் பரிமாற்றம் இடம்பெற்ற விதம் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்த தகவல்கள் விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பேர் கைது
இதேவேளை, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ச, அவரது மகன் ரகித ராஜபக்ச உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊழல் மற்றும் வீணடிப்புக்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பினால் நேற்று இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளிடம் இந்த அமைப்பினரால் முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஹரக் கட்டாவின் தடுப்பு காவல் தொடர்பில் ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: