News Just In

12/16/2022 01:44:00 PM

இராணுவ சீருடையணிந்து திருட்டில் ஈடுபட்ட நபர் மக்களால் பிடிக்கப்பட்டு பொலிசிடம் ஒப்படைப்பு!




கிளிநொச்சி பூநகரி இரணைமாதா நகரில் இராணுவத்தின் சீரூடைக்கு ஒத்த ஆடையணிந்து தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கிராம மக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு முழங்காவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இரணைமாதாநகர் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிற்கு அதிகாலை வேளை உள்நுழைந்த குறித்த நபர் வீட்டிலிருந்து சங்கிலி மற்றும் காப்பு போன்றவற்றை திருடிக்கொண்டு வெளியேறிய போது வீட்டு உரிமையாளரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.

இதன் போது திருடன் தான் கொண்டு வந்த கத்தியால் வீட்டு உரிமையாளரின் முகத்தில் வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட போது ஏற்பட்ட கூக்குரல் காரணமாக அயலவர்களும் ஒன்று சேர்ந்து திருடனை மடக்கி பிடித்துள்ளனர்.

பிடிபட்ட திருடன் இராணுவ சீருடைக்கு ஒத்த உடை அணிந்திருந்ததோடு, முகமூடியும் அணிந்திருந்துள்ளார். அத்தோடு அவரிடம் கூரிய கத்தி ஒன்றும் காணப்பட்டுள்ளது.

மேலும் திருடப்பட்ட சங்கிலி மற்றும் காப்பு என்பவற்றை மீட்டெடுத்ததோடு, அவரிடம் இருந்து கத்தியினை பறித்த ஊர் மக்கள் குறித்த நபரை முழங்காவில் பொலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதன் போது வெட்டுக் காயங்களுக்குள்ளான வீட்டு உரிமையாளர் முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தின் போது சிறுமி ஒருவரும் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

No comments: