வெளிநாடுகளில் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை மருத்துவர்கள் துறைசார் நிபுணத்துவம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் வெளிநாடுகளில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்வது வழமையானதாகும்.
நாட்டில் நிலவி வரும் டொலர் பிரச்சினை காரணமாக இவ்வாறான பயிற்சிகளுக்கு மருத்துவர்களை அனுப்பி வைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இது குறித்து அறிவித்துள்ளார்.
கடிதம் ஒன்றின் மூலம் இந்த விசேட பயிற்சி நெறிகளுக்கான பயணங்களை இடைநிறுத்துமாறு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
எவ்வாறெனினும், சொந்த செலவில் பயிற்சி நெறிகளுக்காக செல்லும் மருத்துவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் செலவு செய்து இந்த பயற்சி நெறிகளுக்காக அனுப்பி வைக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments: