News Just In

11/04/2020 04:25:00 PM

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மகத்தானது- ஊடகத்துறை அமைச்சர்!!


கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு செல்ல ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மகத்தானதாகும். பெரும்பாலான ஊடகவியலாளர்கள் தங்களின் உயிர்களையும் துச்சமாக மதித்து இதனை செயற்படுத்தி வருகின்றனர் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சமகாலத்தில் ஊடகவியலாளர்கள் மேற்கொண்டு வரும் பணி தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு தற்போது எதிர்கொண்டுவரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கவும் அது தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் கடமைகளை, பெரும்பாலான ஊடகவியலாளர்கள் தங்கள் உயிர்களை துச்சமாக மதித்து செயற்பட்டு வருவதை காணமுடிகின்றது. அதிகமான சந்தரப்பங்களில் நாடு எதிர்கொள்ளும் அனர்த்த நிலைமைகளின்போது, ஊடகவியலாளர்கள் தங்கள் தொழில்வாண்மையை கருத்திற்கொள்ளாமல் சிறப்புமிக்க தேசிய கடமையை நிறைவேற்றியிருக்கின்றனர்.

அத்துடன் சில ஊடகவியலாளர்கள் நாடு எதிர்கொண்டுள்ள கொவிட் 19 தொற்று தொடர்பாக மக்களுக்கு வழங்கிவரும் தெளிவு மற்றும் அறிவுறுத்தல்கள் மிகவும் துணைபுரிந்திருக்கின்றன. பல ஊடக நிறுவனங்கள் ஒன்றிணைந்து இது தொடர்பான தெளிவூட்டும் வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றன.

மேலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல பிராந்திய ஊடகவியலாளர்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் நடவடிக்கைகள் சிறப்பு மிக்கதாகும். ஊடகவியலாளர்கள் மேற்கொண்டுவரும் இந்த சிறப்புமிக்க கடமையை எதிர்காலத்திலும் அவர்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டும். அதற்காக அவர்களை கெளரவிக்கவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments: