நிகழ்வு
சாய்ந்தமருது பொது நூலகத்தின் ஏற்பாட்டில் ‘நூலாசிரியர்களைச் சந்தித்தல் – 02’ எனும் நிகழ்வு இன்று (23.08.2026) ஞாயிற்றுக்கிழமை காலை சாய்ந்தமருது பொது நூலகத்தில் நடைபெற்றது.
சாய்ந்தமருது பொது நூலகர் ஏ.எல்.எம். முஸ்தாக் வரவேற்புரையை நிகழ்த்தியதுடன், சிரேஷ்ட எழுத்தாளர் ஏ. பீர்முகம்மது நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார்.
இதன்போது நூலாசிரியர்களான அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி), கலாபூஷணம் யூ.எல். ஆதம்பாவா மற்றும் சிரேஷ்ட ஒலிபரப்பாளர், கலைஞர் ஏ. எல். அன்சார் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர். இவர்களால் எழுதப்பட்ட ‘இஸ்லாமும் கவிதையும்’, ‘கிராமத்து மண்வாசம்’, ‘மலரும் மொட்டுகள்’ உள்ளிட்ட நூல்கள் தொடர்பிலும் நிகழ்வில் அறிமுகம் இடம்பெற்றது.
நிகழ்வின் சிறப்புரையை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முபிஸால் அபூபக்கர் நிகழ்த்தினார். தொடர்ந்து நூலாசிரியர்களுக்கும் வாசகர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், நூலாசிரியர்களின் படைப்புகள், எழுத்துலக அனுபவங்கள் மற்றும் இலக்கியப் பங்களிப்புகள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்வின் நன்றியுரையை சாய்ந்தமருது பொது நூலகத்தின் நூலக உதவியாளர் ஏ.ஏ.எஸ். நபீத் நிகழ்த்தினார். நூலாசிரியர்களையும் வாசகர்களையும் நேரடியாக இணைத்து இலக்கியம், அறிவு மற்றும் வாசிப்புப் பண்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments: