மட்டக்களப்பு - கல்லடி பகுதியில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் நேற்று (19) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு - கல்லடியில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டு நாடகத்துறை மாணவியாகக் கல்வி கற்று வந்த, திருக்கோவில் - தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய கே.யாழினி என்ற மாணவியே நேற்று (19) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே இக்கல்லூரியில் இணைந்து பயின்று வந்த இந்த இளம் மாணவியின் அகால மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விடுதி அறையில் மாணவி உயிரிழந்த நிலையில் காணப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் இருவர் மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக ஏனைய மாணவர்கள் அவர்களை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.தற்போது மயங்கி விழுந்த மாணவிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments: