புதிய அரசாங்கத்தின் பக்கம் ஒருபோதும் செல்லமாடோம் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி, தலைமைத்துவப் பிரச்சினையை விரைவில் தீர்த்துக்கொண்டு புதிய கூட்டணியாக தேர்தலுக்கு முகம்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு கண்காட்சி பண்டபத்தில் இடம்பெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “நாங்கள் ஒருபோது அரசாங்கத்தின் பக்கம் செல்லமாடோம். ஆனால் பொதுத் தேர்தலில் நாங்கள் வெற்றிபெற வேண்டும். அதற்காக அமைக்கும் கூட்டணியில் ஐக்கிய தேசியக் கட்சியே பிரதான கட்சியாக இருக்கப்போகின்றது.
இதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் தலைமைத்துவப் பிரச்சினையை அவர்கள் விரைவாக தீர்த்துக்கொள்ள வேண்டும்.
அத்துடன் பல்வேறு பொய் வாக்குறுதிகளை தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது ஒன்றும் செய்ய முடியாமல் நிலை தடுமாறிக்கொண்டிருக்கின்றது.
சிங்கள மக்களை ஏமாற்றி பொய் வாக்குறுதிகளை வழங்கியே இந்த அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தது. ஆனால் இவர்களின் சுயரூபம் வெளிவந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments: