News Just In

1/27/2020 11:02:00 PM

மட்டக்களப்பில் தண்டவாளத்தில் அமர்ந்து ஹெட்செற் அணிந்து பாட்டுக்கேட்ட இளைஞன் புகையிரதம் மோதுண்டு உயிரிழப்பு


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தண்டவாளத்தில் அமர்ந்து ஹெட்செற் அணிந்து வானொலியில் ஒலிபரப்பாகும் சினிமாப் பாடல்களை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த இளைஞன் புகையிரதத்தில் மோதுண்டு ஸ்தலத்திலேயே பலியாகியுள்ள சம்பவம் மட்டக்களப்பு புணானையில் இடம்பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 26.01.2020  இரவு 9.30 இற்கு இடம்பெற்றுள்ள இந்த விபத்தில் புணானை மயிலந்தன்னை கிராமத்தைச் சேர்;ந்த ஜேக்கப் ஜோன்சன் (வயது 19) என்பவரே பலியாகியுள்ளார் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து இரவு 8.15 மணிக்கு கொழும்பு நோக்கிப் புறப்பட்ட இரவு நேர கடுகதி ரயில் புணானையை கடக்கும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தை அறிந்து உதவிக்கு விரைந்தவர்களால் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஸ்தலத்திற்கு விரைந்துள்ள பொலிஸார் சம்பவம்பற்றிய விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விபத்தில் சிக்கி பலியான அந்த இளைஞர் ஹெட்செற் அணிந்தவாறு குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள  சாரத்தினால் தன்னைப் போர்த்துக் கொண்டு புகையிரதத் தண்டவாளத்தில் அமர்ந்து இருந்தவாறு வானொலி சினிமாப்பாடல்களை ரசித்துக் கொண்டிருந்ததாக ஆரம்பக் கட்;ட விசாரணைகளில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: