News Just In

12/11/2019 11:17:00 AM

வவுணதீவு களிக்குளத்தினை உலக வங்கி உதவியில் புனரமைக்க மக்கள் பங்களிப்புடன் மதிப்பீட்டு அறிக்கை தயாரிப்பு

-சதீஸ்-
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலுள்ள களிக்குளத்தினை உலக வங்கியின் உதவியால் புனரமைக்கும் வகையில் கிராம மட்டத்திலான மக்கள் பங்களிப்புடன் மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமத்தில் உலக வங்கியின் உதவியால் காலநிலைக்கு சீரமைவான விவசாயத் திட்டத்தின் கீழ் அங்குள்ள களிக்குளத்தினை புனரமைக்கும் வகையில் கிராம மட்டத்திலான மக்கள் பங்களிப்புடனான மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கும் செயற் திட்டத்தின் இரண்டாவது நாள் நிகழ்வு செவ்வாய்கிழமை (10.12.2019) நெடியமடு ஆரம்பப் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

கமத்தொழில், மீன்பிடி, நீர்பாசன மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் ஊடாக உலக வங்கியின் நிதி உதவியுடன் மேற்படி நீர்பாசன விவசாயத் திட்டத்திட்டம் நெடியமடு கிராமத்தில் நடைமுறைப்படுத்தவுள்ளனர்.

இன் நிகழ்வு திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் நடைபெறுவதுடன் வியாழக்கிழமை குளம் அமைந்துள்ள பிரதேசத்திற்கு கள விஜயமும் இடம்பெறவுள்ளது.

கிழக்கு மாகாண நிகழ்ச்சித் திட்ட முகாமைத்துவப் பிரிவினூடாக மேற்படி கிராமத்தில் அமைந்துள்ள களிக்குளத்தினை சகல வழிகளிலும் புனரமைப்புச் செய்து அக் குளத்தினை மேலும் விரிவுபடுத்தி எக்காலநிலையிலும் மக்கள் பயன்பெறக்கூடியவாறு திட்டத்தினை செயற்படுத்துவதற்கான ஆரம்ப செயற்பாடுகள் இந்த மூன்று நாட்கள் கொண்ட நிகழ்வில் இடம்பெறுகின்றது.

இந் நிகழ்வில், பி.ஆர்.ஏ திட்ட பொறுப்பு வளவாளர் ஏ.ரவிராஜ் , வளவாளர்களான தி. சிறிதர், எஸ்.அறிவளகன், எம்.சியாபுல், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ. ரஷிற், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆயித்தியமலை விவசாய போதனாசிரியர் எம்.ஷிபான், வீ.வசந்தராஜா மற்றும் விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.

No comments: