News Just In

11/22/2019 12:09:00 PM

மட்டக்களப்பின் மூத்த ஊடகவியலாளர் கதிர்காமதம்பி வாமதேவன் காலமானார்

மட்டக்களப்பின் பத்தரிகைத்துறையில் தனக்கென தனி இடத்தை பதித்திருந்த மூத்த ஊடகவியலாளரான கதிர்காமதம்பி வாமதேவன் அவர்கள் நேற்று வியாழக்கிழமை (21.11.2019) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலமானார்.

இவர் 1980ம் ஆண்டு வீரகேசரி, சூடாமணி, தினபதி, சுதந்திரன், ஈழநாடு, தினமுரசு ஆகிய பத்திரிகைகளுக்கு ஊடக பணியினை ஆற்றிவந்தமை குறிப்பிடத்தக்கது.

கதிர்காமதம்பி அவர்களின் புதல்வாரன இவர் கல்லடி நொச்சிமுனையில் 1950ம் ஆண்டு 12ம் மாதம் 2ம் திகதி பிறந்த இவர் செங்கலடி பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ஆன திருமதி.இந்துமதியின் கணவரும் ஆவார்.

இவர் தனது ஆரம்பகல்வியை ஏறாவூர்-4 காளி கோவில் பாடசாலையிலும் ஏறாவூர் 5ம் குறிச்சி விவேகானந்தா வித்தியாலயத்திலும் ஏறாவூர் அலிகார் பாடசாலையில் உயர் கல்வியையும் கற்றார்.

சமூக சேவகர் ஆக நுழைந்த இவர் ஏறாவூர் வீரகேசரிக்கான மூத்த ஊடகவியவலாளராக செயற்பட்டிருந்தார் அவ்வேளை முதல் முதலில் மறைந்த அகமது லெப்பை மாஸ்டர் என்பவரிடம் இருந்து பத்திரிகைக்கு செய்தி எழுதும் பயிற்சியை பெற்றுக்கொண்டு முதல் முதலில் அக்காலத்தில் வெளியான சுதந்திரன் எனும் பத்திரிகையின் செங்கலடி நிருபராக சேவையாற்றி வந்தார்.

இளமைக்காலத்தில் இவரது சிறந்த செய்தி சேவையினால் எம்.ரீ குணசேகர நிறுவனத்தின் தமிழ் வெளியிட்டு பத்திரிகையின் பிரதம ஆசிரியரான எஸ்.ரீ. சிவநாயகத்தின் வழிகாட்டுதலிலே ஊடகவியலாளருக்கான பயிற்சியை பெற்று தினபதி, சிந்தாமணி ஆகிய இரு பத்திரிகைக்கும் செங்கலடி நிருபராக செயற்பட்டவர்.

இவ்வேளை சிந்தாமணி பத்திரிகையிலே வாரம் ஒரு தடவை வெளிவந்த அத்தாணி மண்டபம் பகுதியிலும் தனது எழுத்து திறமையினை வெளிக்காட்டி தனியிடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பத்திரிகைத்துறையிலே தனக்கென தனியிடத்தினை பதித்திருந்த கலாபூசணம் வாமதேவன் அக்காலத்தில் வெளியான ஈழநாதம் ,தினமுரசு போன்ற பத்திரிகைகளுக்கும் செய்தியாளராக பணியாற்றிய பெருமை இவருக்குண்டு.

இவ்வாறு பத்திரிகைத்துறையில் செய்தி எழுதுவது ஆர்வம்,அனுபவம் காரணமாக வீரகேசரி பத்திகைக்கு வெற்றிடமாக இருந்த பதவி வழங்கப்பட்டு மிகவும் சிறந்த ஊடகவியலாளர் சேவையில் ஈடுபட்டவராக விளங்கினார்.

சித்தாண்டி நிருபராக ,செய்தியாளராக செயற்பட்ட காலப்பகுதியிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சைவத்திருத்தலங்களின் கொடியேற்ற திருவிழா ஆரம்ப காலப்பகுதியில் சிறப்புக்கட்டுரைகளை தவறாது வீரகேசரியில் வெளியிட்டு வந்த பெருமை இவரைச்சாரும்.

அதுமாத்திரமன்றி பல்வேறு அமைப்புக்களிலும் பல்வேறு பதவிகளை வகித்த இவர் விருதுகள் ,சான்றுறிதழ்கள் ,கௌரவிப்புகள் என பல பராட்டுக்களை தனது சேவைக்காக பெற்றுக்கொண்ட ஒரு சிறந்த பத்திரிகையாளராக மாவட்டத்தில் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

கலாபூசணம் வாமதேவன் தனது வாழ்கை காலத்திலே மக்களுக்கு சமூக சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் சமாதான நீதவானாகவும் திகழ்ந்தவர்.இவருடைய ஊடக பணியினை பாராட்டி 2015ம் ஆண்டு இந்து சமய கலாச்சார திணைக்களத்தினால் கலாபூசணம் விருது கிடைக்கப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பத்திரிகைத்துறையில் சேவையாளராக மாத்திரம் இவர் நின்று விடவில்லை அரச உத்தியோகமாகிய கிராம சேவையாளராக செங்கலடி பிரதேச செயலகப்பிரிவில் ஒரு கடமை உணர்வுடன் இடமாற்றம் இன்றி தொடர்ந்து 30 வருடங்கள் பல மக்களுக்கு பணியாற்றிய பெருமையும் இவரைச்சாரும்.

No comments: