News Just In

11/26/2019 08:38:00 PM

திருகோணமலையில் இடம்பெற்ற அனர்த்த தாங்குதிறனுடைய வீட்டுக் கட்டுமானம் தொடர்பான கருத்தரங்கு

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் அனர்த்தத் தாங்கு திறனுடைய வீட்டுக் கட்டுமானம் தொடர்பிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்று இன்றைய தினம் (26) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் பொது மக்களுக்கான வீடுகளின் கட்டுமானப்பணிகளில் சம்பந்தப்படும் கட்டடங்கள் திணைக்களம், உள்ளுராட்சி சபைகள், தேசிய வீடமைப்பு அதிகார சபை, கல்வித்திணைக்களம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் இவ் விழிப்புணர்வுக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இக் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் கே.சுகுணதாஸ் கலந்து கொண்டார்.

இன்றைய கருத்தரங்கில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் நகரத்திட்டமிடலாளர் எல்.ஜே.பிரசன்னா, பொறியியலாளர்களான எஸ்.எம்.எம்.இன்பார்ஸ், ஏ.எம்.எம்.ஜசாபி ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு விளக்கங்களை வழங்கினர்.

இலங்கையில் வீட்டுக்கட்டுமானங்கள் அதிகரித்து வருகின்ற அதே நேரத்தில் அனர்த்தங்களினால் அழிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இந் நிலையில் இருந்தும், பொருளாதார இழப்பிலிருந்தும் மக்களை பாதுகாக்கும் வகையில் இவ் விழிப்புணர்வுச் செயல்திட்டங்களை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளம், நில நடுக்கம், சுழல் காற்று, சூறாவளி என பல்வேறு அனர்த்தங்களினால் பாதிப்புக்களை எதிர் கொள்ளும் இலங்கையிலுள்ள மக்களுக்கு அவர்களுடைய வீடுகளை அனர்த்த தாங்கு திறனுடையவைகளாக அமைப்பதற்கான ஆலோசனைகளையும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மாவட்ட ரீதியாக இவ்வாறான விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments: