மாகாண மட்டத்தில் இடம்பெற்ற ரோபோட்டிக் போட்டியில் பங்கேற்பதற்காக பாடசாலை அதிபர் திருமதி பி.கமலேஸ்வரியின் ஒத்துழைப்புடனும் பாடசாலை ஆசிரியர்களின் துணையுடன் கழிவுப் பொருட்களின் ஊடாக ரோபோ ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் குறித்த மாணவி ஈடுபட்டிருந்தார்.
யுத்தம் காரணமாக 2009 ஆம் ஆண்டு தனது தந்தையை இழந்த இம் மாணவி தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த போதிலும் விஞ்ஞான தொழில்நுட்ப பாடத்தினை மிகுந்த ஆர்வத்துடன் கற்று வருகின்றார். இந்நிலையிலேயே மாகாண மட்ட போட்டியில் பங்கேற்க ஆர்வம் கொண்டு இக் கண்டுபிடிப்பில் ஈடுபட்போதிலும் போதியளவு நிதிவசதிகள் இல்லாமையினால் அதிபரினூடாக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் மூலம் சிறு தொகை பணத்தினை பெற்று தனது முயற்சியை ஆரம்பித்திருந்தார்.
இதன்போது கழிவுப் பொருட்கள் என பயன்படுத்தாது எறியப்பட்ட பொருட்களையும் தனது கண்டுபிடிப்புக்கு மாணவி பயன்படுத்தியிருந்தார். இந்நிலையில் குறித்த மாணவி இரத்தப் பரிசோனைக்காக இரத்தத்தினை நோயாளியிடம் இருந்து பெறுவதற்கான தானியங்கி முறைமையை (AUTO NEEDLE INJECTOR) கண்டுபிடித்தார். இக் கண்டுபிடிப்பினை மாகாண மட்டத்தில் இடம்பெற்ற ரோபோட்டிக் போட்டியில் பங்கேற்க வைத்ததன் ஊடாக மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட இம் மாணவி தேசிய மட்டத்தில் இடம்பெறும் போட்டிக்கும் தெரிவாகியுள்ளார்.
குறித்த பாடசாலையின் அதிபர் கருத்து தெரிவிக்கையில், ரோகிதா புஸ்பதேவன் மாகாண மட்டத்தில் ரோபொட்டிக் போட்டியில் பங்கேற்பதற்காக ரோபோ ஒன்றினை செய்ய விருப்பமுள்ளதாக தெரிவித்திருந்தார். அத்துடன் கழிவுப் பொருட்களுடாக அதனை செய்யவுள்ளதாகவும் சில பொருட்களை வாங்க வேண்டியுள்ளதனால் சிறுதொகை நிதி தேவை எனவும் தெரிவித்தார். எனவே நிச்சயமாக அதனை செய்யுமாறு நான் தெரிவித்ததுடன் நிதியுதவியை பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஊடாக பெற்று தரலாம் என தெரிவித்தேன். அதன் பிரகாரம் நான்காயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை மாத்திரம் வெளியில் வாங்கியிருந்தார்.
மற்றைய பொருட்கள் எல்லாவற்றையும் கழிவுப் பொட்களில் இருந்து பெற்றுக்கொண்டார். அந்த மாணவிக்கும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர் குழாமிற்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன். இந்த மாணவி ஏனைய மாணவர்களுக்கு முன்மாதிரியாக செயற்பட்டு பெண்களாலும் முடியும் என்பதனை வெளிப்படுத்தியுள்ளார். அவர் மாகாண மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்றமை வவுனியா மாவட்டத்திற்கும் எமது வலயத்திற்கும் பாடசாலைக்கும் பெருமையைத் தேடித் தந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments: