News Just In

11/26/2019 05:24:00 PM

வந்தாறுமூலையில் இடம்பெற்ற அழகியற் கற்கைகள் டிப்ளோமா பாடநெறியின் செயன்முறைப் பயிற்சி

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
பெண்களின் தனித்துவமான கலையார்வம்மிக்க தொழிற்துறையாகவும் வீட்டுக்கும் நாட்டுக்கும் அதிக வருமானத்தை ஈட்டிக் கொடுக்கக் கூடியதாகவும் தற்போது வளர்ந்து வரும் துறை அழகியற் கற்கையாகும் என மட்டக்களப்பு வந்தாறுமூலை தேசிய தொழிற் பயிற்சி நிறுவன அழகியற் கற்கைகள் பயிற்சிப் போதனாசிரியை ஆர். விஷயனி சத்தியானந்தா தெரிவித்தார்.

அழகியற் கற்கைகள் டிப்ளோமா பயிற்சி நெறியின் இறுதித் தவணைப் பாடநெறியை ஒட்டியதான செய்முறைப் பயிற்சிநெறி செவ்வாய்க்கிழமை 26.11.2019 மட்டக்களப்பு வந்தாறுமூலை தேசிய தொழிற் பயிற்சி அழகியற் கற்கைள் பிரிவில் இடம்பெற்றது.

அங்கு பயிலுநர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த போதனாசிரியை விஷயனி, அழகியற் கற்கைகள் டிப்ளோமா பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்யும் பயிலுநர்களுக்கு வழங்கப்படும் தேசிய தொழிற் பயிற்சி தகைமைச் சான்றிதழ்களை ஒரு தராதரமாகக் கொண்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கவர்ச்சிகரமான வருமானமீட்டக் கூடிய தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அதேவேளை, மேலும் அத்துறையில் உயர் கல்வியையும் பெற்று சிறந்த அழகியற் துறை நிபுணராகவும் முடியும். தற்போது பாடசாலை கல்வியை முடித்த மாணவிகள் மத்தியிலே அழகியற் கற்கைக்கு அதிக ஆர்வம் காணப்படுகிறது.

இத்தொழிற்துறை மனநிறைவான தனித்துவமான கலையாக வளர்ந்துவருவதோடு அதிக சுயதொழில் வருமானத்தை ஈட்டுவதாகவும் காணப்படுகிறது.

ஆறு மாத கால அழகியற் கற்கைகளை நிறைவாகப் பூர்த்தி செய்து பிரயோகம், செய்முறை. மற்றும் அறிவுத் தேர்வுகளில் சித்தியடைந்த யுவதிகள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு சுயதொழிலை ஆரம்பிக்கின்றனர்.

திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபையின் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள் மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதோடு இங்கு வழங்கப்படும் தேசிய தொழிற் பயிற்சி தகைமைச் சான்றிதழ்களை ஒரு தராதரமாகக் கொண்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கவர்ச்சிகரமான வருமானமீட்டக் கூடிய தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்' என்றார்.

No comments: