News Just In

11/28/2019 08:49:00 AM

'ஐ-ரோட்' திட்ட வீதிகளை துரிதமாக செப்பனிடுமாறு எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
வீதி அபிவிருத்திக்காக 'ஐ-ரோட்' வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த வருடம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட வீதிகளை செப்பனிடும் பணிகளை துரிதப்படுத்துமாறு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நான் பணியாற்றியபோது அந்த அமைச்சின் 'ஐ-ரோட்' வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகளை உள்ளடக்கியிருந்ததோடு அதற்கான நிதியினை கொந்தராத்து நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்திருந்தேன்.

தற்போது ஆட்சி மாறியுள்ள நிலையில் ஐரோட் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விடயப்பரப்புக்கு பொறுப்பான புதிய அமைச்சரின் அனுசரணையுடன் துரிதப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
தற்போது மழைக்காலமாகையால் குறிப்பாக காத்தான்குடி டீன் வீதி, மத்திய வீதி மற்றும் புதிய காத்தான்குடி முகைதீன் ஜும்ஆ பள்ளி வீதி ஆகியவற்றை முன்னுரிமை அடிப்படையில் மிக அவசரமாக செப்பனிடும் பணிகளை ஆரம்பிக்க வேண்டியுள்ளது.

இதேவேளை, ஐரோட் வீதி அபிவிருத்திக்குத் தெரிவு செய்யப்பட்ட வீதிகளைச் செப்பனிடும் பணிகள் எதிர்வரும் வாரங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட அதிகாரிகள் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்விடம் உறுதியளித்துள்ளதாகத் தெரியவருகின்றது

No comments: