ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள கற்பானைக் குளப்பகுதியில் தரம் 08இல் கல்வி கற்றுவரும் 14 வயது சிறுமி ஒருவரை விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்தி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து புதன்கிழமை (06.11) இரவு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ். எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் குறித்த சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தரகரை கையடக்க தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு லாவகமாக பேசி கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த சிறுமியின் சிறிய தந்தையாரை கைது செய்ததுடன் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். குறித்த சிறுமி கடந்த ஜனவரி மாதம் பூப்படைந்துள்ளதாகவும் அவரை சிறிய தந்தையார் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டதுடன் சிறுமியை அவரது வீட்டில் கைது செய்யும்வரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
விபச்சார தரகர், ஆசிரியர் ஒருவர் மற்றும் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேர் இந்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோக விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் இந்த விபச்சாரத்திற்கு ஒருவருக்கு தலா 20 ஆயிரம் ரூபா பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 விபச்சார விடுதிகள் இயங்கி வருவதாகவும் தலைநகரில் இரண்டு விபச்சார விடுதிகள் இயங்கி வருவதாகவும் பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவத்தில் 38 வயதுடைய குமார் என்றழைக்கப்படும் சிறிய தந்தையார், 35ஆம் கொலனி வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தரகர் ஆகிய இருவரையும் கைது செய்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை ஆஜர்படுத்தியபோது இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட ஆசிரியர் ஒருவர் உட்பட 5 பேரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

No comments: