News Just In

7/08/2021 08:28:00 PM

மக்களின் பிரதிநிதிகள் ஒற்றுமையுடன் செயற்பட்டு சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்- மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம்!!


(எப்.முபாரக்)
சிறுபான்மை மக்களின் கருத்துக்களுக்கு அரசு செவிசாய்க்கும் சூழல் உருவாகி வருகிறது இதனை மக்களின் பிரதிநிதிகள் ஒற்றுமையுடன் செயற்பட்டு சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 
இலங்கை அரசானது இன்றைய நிலையில் பொருளாதார ரீதியாகவும், ஏனைய பல விடையங்கள் ரீதியாகவும் மிகுந்த நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. பெரும்பான்மை மக்களினுடைய ஒத்துழைப்பு மாத்திரம் போதும் என்ற விறுமாப்புடன் இருந்த அரசு பெரும்பான்மை மக்களிடையேயும் தனது செல்வாக்கை இழந்து வரும் நிலையில் சிறுபான்மை மக்களினுடைய ஒத்துழைப்புக்களையும் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றது. 

கொரோனா தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத மக்களின்மீது தொடர்ந்து சுமத்தப்பட்டு வருகின்ற விலையேற்றங்களினால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அசேதன பசளையின் திடீர் நிறுத்தம், கடல்வளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு போன்றன விவசாயிகளையும், மீனவர் சமூகத்தையும் மாத்திரமின்றி ஒட்டுமொத்த மக்களையும் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. இதனால் அனைத்து மக்களும் வீதிக்கு இறங்கியுள்ளனர். 

குறிப்பாக ஆட்சி பீடத்தை தீர்மானிக்கின்ற சக்தியாக விளங்குகின்ற மகா சங்கத்தினருடைய அதிருப்தியையும் அரசு தனது செயற்பாடுகளினால் சம்பாதித்து வருகின்றது. இன்றைய நிலையில் அனைத்து மக்களும் சேர்ந்து எமது நாட்டையும், அரசாங்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. இந்த நிலைக்கு அரசும் தள்ளப்பட்டுள்ளது. இதனால் சிறுபான்மை மக்களுடைய கருத்துக்களுக்கு செவிசாய்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. எனவே இந்த வாய்ப்பை சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகள் ஒற்றுமையுடன் செயற்பட்டு சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments: