News Just In

6/13/2026 10:24:00 AM

கே.பி வழங்கிய பல டன் தங்கம் மாயம் : சிக்கலில் ராஜபக்ச காலத்து அரசியல்வாதிகள்!

கே.பி வழங்கிய பல டன் தங்கம் மாயம் : சிக்கலில் ராஜபக்ச காலத்து அரசியல்வாதிகள்



தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச நிதிப் பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் (கே.பி.) மூலமாகப் பெறப்பட்ட, பல கோடி ரூபாய் பெறுமதியான பல டன் தங்க நகைகள் மற்றும் பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் முன்னாள் ராஜபக்ச அரசாங்கத்தின் மிக முக்கிய அரசியல்வாதிகள் சிலரிடம் லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடமும் கடந்த 11ஆம் திகதி லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் வடக்கு, கிழக்கு யுத்தம் முடிவடைந்ததையடுத்து, சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு மலேசியாவில் வைத்து கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர் அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அந்த விசாரணைகளின் போது, விடுதலைப் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமான, பல கோடி ரூபாய் பெறுமதியான பல டன் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

அவ்வாறு மீட்கப்பட்ட தங்கம், அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும், அதன் பின்னர் அந்தத் தங்கத்திற்கு என்ன நடந்தது என்பது குறித்த விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை.

இது தொடர்பாக லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிற்குப் முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தற்போது இது குறித்துப் பரந்தளவிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ராஜபக்ச அரசாங்கக் காலத்தில் இருந்த முன்னணி அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் சிலரிடம் எதிர்வரும் நாட்களில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

இந்தத் தங்கத் தொகுதியானது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் சட்டவிரோத சர்வதேச வர்த்தகங்கள் மூலம் ஈட்டப்பட்டவை என தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments: