News Just In

6/05/2026 03:13:00 PM

கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் பிள்ளையானால் நடத்திவரப்பட்ட முகாமில் வைத்து கொல்லப்பட்டார்!

கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் பிள்ளையானால் நடத்திவரப்பட்ட முகாமில் வைத்து கொல்லப்பட்டார்



கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் பிள்ளையானால் நடத்திவரப்பட்ட முகாமில் வைத்து கொல்லப்பட்டார் என்பதற்கான நேரில் கண்ட சாட்சியங்களும், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் அளித்த இரகசிய வாக்குமூலங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது.

இதன்படி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இது குறித்து தெரியவருகையில்,
தனது கைது மற்றும் தடுப்புக்காவல் சட்டவிரோதமானது எனத் தெரிவித்து பிள்ளையானால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் இந்த விடயங்களை வெளிப்படுத்தினார்.

மகிந்த சமரவர்தன, அர்ஜுன ஒபேசேகர மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அங்கு சட்டத்தரணி உதய கம்மன்பிலவுடன் மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தனது கட்சிக்காரரைக் கைது செய்தபோது அதற்கான காரணங்களை விளக்காததன் மூலம் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமார் பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் காணாமல் போன சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்ய சட்ட ஏற்பாடுகள் இல்லை என்றும் அவர் வாதிட்டுள்ளார்.

மேலும், பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியிடமிருந்து தடுப்புக் காவல் உத்தரவுகளைப் பெறும் போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் திருப்திகரமான போதுமான காரணங்களை முன்வைக்காததால் அந்த செயல்முறை முற்றிலும் சட்டத்திற்கு முரணானது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், கைது செய்யப்பட்டபோதும், வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டபோதும் உரிய காரணங்கள் மனுதாரருக்கு வாய்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
பொலன்னறுவை செவனபிட்டிய பிரதேசத்தில் சட்டவிரோத முகாம் ஒன்றை நடத்தி எதிர்ப்பாளர்களுக்கும் பல்வேறு நபர்களுக்கும் சித்திரவதை செய்தமை தொடர்பில் மனுதாரருக்கு எதிராக வலுவான விடயங்கள் விசாரணைகள் மூலம் வெளிவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.



கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் அந்த முகாமில் வைத்து கொல்லப்பட்டார் என்பதற்கான நேரில் கண்ட சாட்சியங்களும், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் அளித்த இரகசிய வாக்குமூலங்களும் இருப்பதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

எனவே, விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் சட்டபூர்வமாக தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும், அதற்காக வாக்குமூலங்களின் பிரதிகளை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று சட்டம் இல்லை என்றும் அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.

இரு தரப்பினரின் சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், சம்பந்தப்பட்ட சாட்சியாளர்களின் வாக்குமூலங்களின் பிரதிகளை இரகசிய உறையில் இட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்டது.

அத்துடன், வழக்கு தொடர்பான எழுத்துமூல சமர்ப்பிப்புகள் இருந்தால், அவற்றை ஜூன் மாதம் 22ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு தரப்பினர்களுக்கு அறிவித்த நீதிபதிகள் குழாம், மனு தொடர்பான தீர்ப்பை அறிவிப்பதை ஒத்திவைக்கவும் தீர்மானித்தது

No comments: