
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மீண்டும் நாடு திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, இதய அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இருப்பினும், ஷிராந்தி ராஜபக்ச சிங்கப்பூரில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளாமல், இலங்கையிலேயே செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது மருத்துவ நிலை குறித்து அறிந்துக்கொள்ள பொதுமக்களுக்கு ஆர்வம் இருந்தபோதிலும், ஒருவரின் நோய் என்பது ஒரு தனிப்பட்ட விஷயம் என்றும், அதை நாடு முழுவதற்கும் கட்டாயம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் குடும்பத்தினர் விளக்கமளித்துள்ளனர்.
இதன் விளைவாக, அவரது உடல்நிலை தொடர்பான விபரங்களை வெளியிட குடும்பத்தினர் தயாராக இல்லை என்றும் கூறப்படுகின்றது.
தேவையான வைத்திய சிகிச்சையைப் பெற்ற பிறகு அவர் இலங்கைக்கு திரும்புவார் என்றும், இருப்பினும் அதற்கான சரியான நேரத்தை வைத்திய ஆலோசனையைப் பொறுத்து நிர்ணயிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கடந்த வாரம் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் SQ-469 என்ற விமானத்தில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (16) திகதி அதிகாலை சுமார் 1:10 மணியளவில் நாட்டிலிருந்து வெளியேறியிருந்தார்.
அவருடன் ரோஹித ராஜபக்சவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச்சென்றிருந்தார்.
இந்நிலையில், ஷிரந்தி ராஜபக்சவை நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் நாட்டை விட்டுச் தப்பிச்சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து ஷிரந்தி ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிச்செல்லவில்லை என்றும், அவசர சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றுள்ளதாக மகிந்த தரப்பு விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: