News Just In

7/08/2026 06:20:00 AM

அதிகரித்த வெப்பத்தால் மரங்களில் பற்றிய தீ!

அதிகரித்த வெப்பத்தால் மரங்களில் பற்றிய தீ!



நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலையின் தாக்கத்தால் வவுனியா - இறம்பைக்குளம் வட்டாரத்தில் பனை மற்றும் தென்னை மரங்களில் திடீரென தீ பற்றியுள்ளது.

இறம்பைக்குளம் பகுதியில் உள்ள பனை மற்றும் தென்னை மரங்களில் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பிடித்து தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

தற்போதைய கடுமையான வறட்சி மற்றும் சூழல் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக தீ மிக வேகமாக பரவ ஆரம்பித்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது.

சம்பவம் குறித்து உடனடியாக வவுனியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

தகவலறிந்த தீயணைப்பு படையினர், தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயைக் குறுகிய நேரத்திற்குள் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் தீ அருகிலிருந்த குடியிருப்புப் பகுதிகளுக்கு பரவுவது தடுக்கப்பட்டு, பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வவுனியா மாநகர முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டார உறுப்பினர் ஆகியோர் நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டனர்.

தற்போது நிலவி வரும் கடுமையான காலநிலை மாற்றம் மற்றும் வெப்ப அதிகரிப்பு காரணமாக, பொதுமக்கள் தீ விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

No comments: