சம்மாந்துறை நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து காரைதீவு பிரதேச நீதிமன்ற நடவடிக்கைகளை விளக்கி காரைதீவு பொலிஸ் பிரிவின் நீதிமன்ற நடவடிக்கைகளை கல்முனை நீதிமன்றங்களுடன் இணைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க காரைதீவு பிரதேச சபையில் தவிசாளர் எஸ். பாஸ்கரன், உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயீல் ஆகியோரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
காரைதீவு பிரதேச சபையின் 04 வது சபையின் 13வது கூட்டம் இன்று (09) தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.
இங்கு இது தொடர்பில் கருத்து தெரிவித்த தவிசாளர் எஸ். பாஸ்கரன், உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயீல் ஆகியோர் பொதுமக்களின் வீணான அலைச்சல், நிதி விரயம், போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் நீண்ட தூரம் ஆகியவற்றை தெளிவுபடுத்தி உடனடியாக இது தொடர்பிலான அடுத்த கட்ட மேலதிக நடவடிக்கை எடுக்க சபைக்கு கோரிக்கை முன்வைத்தனர்.
தொடர்ந்தும் சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் உள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வழங்கும் போது சபையின் கீழுள்ள சனசமூக நிலையங்கள் உரிய முறையில் இயங்காத நிலையிலும் புதிதாக உருவாக்கப்படாத நிலையிலும் காணப்படுகின்றமையினால் வேலைகளை செயற்படுத்துவதற்கு அந்தந்த கிராமத்திலுள்ள பொருத்தமான பதிவு செய்யப்பட்ட ஏனைய சமூக மட்ட அமைப்புகளுக்கு வேலைத்திட்டங்களை வழங்குவதற்கு சபை அனுமதி பெற தவிசாளரால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு முன்னாள் தவிசாளரும், தற்போதைய உறுப்பினருமான வை. கோபிகாந்த் தர்க்கரீதியான மற்றும் சட்ட ரீதியிலான பல்வேறு விடயங்களை முன்வைத்து பலத்த ஆட்சேபனைகளை முன்வைத்து கருத்துக்களை முன்வைத்ததுடன் ஏனைய உறுப்பினர்களும் இந்த பிரேரணைக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை முன்வைத்தனர்.
இதனையடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 03 வாக்குகள் பிரேரணைக்கு எதிராகவும், 06 வாக்குகள் பிரேரணைக்கு ஆதரவாகவும் அளிக்கப்பட்டது. இதனூடாக 03 மேலதிக வாக்குகளினால் இப்பிரேரணை வெற்றிபெற்றது. பிரேரணைக்கு எதிராக வை. கோபிகாந்துடன் இணைந்து தேசிய மக்கள் சக்தி பெண் உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இதனைத்தொடர்ந்து இங்கு உரையாற்றிய உறுப்பினர் ஏ. பர்ஹான், காரைதீவு பிரதேச கடலரிப்பை கட்டுப்படுத்த பல்வேறு கட்டங்களாக கடலரிப்பு அணைகள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாளிகைக்காடு மையவாடி கடலரிப்பு அணை நிர்மாண பணிக்காக ஒதுக்கப்பட்ட பாறாங்கற்களை இடப்பற்றாக்குறை காரணமாக காரைதீவு பிரதேசத்தில் தேக்கி வைக்கப்பட்டது. பின்னர் அவை அங்கிருந்து அகற்றப்பட்டு வேலைத்திட்டம் சீராக முன்னெடுக்கப்பட்டது. அதனை சிலர் அரசியல் ஆதாயங்களுக்காக தமிழ் மக்களுக்கு அநீதி நடப்பதாகவும், தமிழ் மக்களின் உடமைகள் காவுகொள்ளப்படுவதாகவும் இனவாத, மதவாத, பிரதேசவாத கருத்துக்களை காரைதீவு தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள். இதன் உண்மைத்தன்மையை மக்களுக்கு விளக்கும் பொறுப்பு இந்த உயரிய சபைக்கு இருப்பதாக தெரிவித்தார்.
இந்த அமர்வின் போது தவிசாளரின் கோரிக்கைக்கு அமைய ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கும், முன்னாள் உப தவிசாளரும், தற்போதைய உறுப்பினருமான ஏ.எம். ஜாஹீரின் கோரிக்கைக்கு அமைய ஈரானின் முன்னாள் உயர் தலைவரான அயதுல்லா அலி கொமெய்னியின் மறைவுக்கும், அவருடன் இணைந்து காலமான அவரது உறவினர்கள், அமெரிக்க- இஸ்ரேலிய தாக்குதலில் காலமான குழந்தைகள், பொதுமக்களுக்கும் மௌன அஞ்சலி (பிரார்த்தனை) செலுத்தப்பட்டது.
மேலும் பல பல்வேறு விடயங்களை ஆராய்ந்த சபை முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது.
No comments: