
சிறைச்சாலையிலோ அல்லது வைத்தியசாலையிலோ எத்தகைய நாடகங்களை அரங்கேற்றினாலும், சுரேஷ் சலேவினால் சட்டத்தின் பிடியிலிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அவர் செய்த குற்றங்களுக்கான தண்டனையை அவர் கண்டிப்பாக அனுபவித்தே தீர வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானியான சுரேஷ் சலே உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான உண்மைகளையும், இரகசியங்களையும் வெளியிடாமல் தொடர்ந்து மறைக்க முற்படுவாரானால், அவர் இரட்டிப்புத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.
இது குறித்து ஊடகங்களிடம் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவிக்கையில்,
"சுரேஷ் சலே மட்டுமன்றி, இந்தக் கொடூரத் தாக்குதலுடன் தொடர்புடைய, அதற்குப் பின்னணியில் இருந்த அனைத்து நபர்களுக்கும் நீதிமன்றத்தின் ஊடாக தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும். குற்றவாளிகள் எவரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பிழைக்க முடியாது." - என்றார்.
No comments: