அமெரிக்காவில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை அமெரிக்க நீதிமன்ற உத்தரவின்படி நாட்டிற்கு திரும்பிக்கொண்டுவர முடியும் என்று முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதையடுத்து அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது பசில் ராஜபக்ச அமெரிக்காவில் உள்ள நிலையில், அவரை நாட்டிற்கு திரும்ப கொண்டுவருவதற்காக அரசாங்கம் சர்வதேச அளவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், பசில் ராஜபக்சவை இங்கு கொண்டுவருவது சாத்தியமே என்றும், ஆனால் அது எளிதான காரியம் அல்ல என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்து, இன்டர்போலின் முழு ஆதரவுடன் பசில் ராஜபக்சவை இங்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், அவரை இங்கு கொண்டுவருவதற்காக இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: