News Just In

7/28/2026 11:25:00 AM

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள் : பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு சாய்ந்தமருது நொத்தாரிசுகள் கூட்டாக எச்சரிக்கை!

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள் : பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு சாய்ந்தமருது நொத்தாரிசுகள் கூட்டாக எச்சரிக்கை!



நூருல் ஹுதா உமர்

மோசடிகளைத் தடுக்கும் சட்டக் கட்டளைச் சட்டம் (Prevention of Fraud Ordinance) மற்றும் நொத்தாரிசுகள் சட்டக் கட்டளைச் சட்டத்தின் (Notaries Ordinance) கீழ், நிலம் தொடர்பான எந்தவொரு உறுதியும், தகுதியும் உரிமமும் பெற்ற பிரசித்தி பெற்ற நொத்தாரிசு அல்லது நொத்தாரிசு உரிமம் கொண்ட சட்டத்தரணிகள் முன்னிலையிலேயே நிறைவேற்றப்பட வேண்டும். மாறாக, ஒரு நொத்தாரிசின் கிளாக் அல்லது சட்டவிரோத முகவர்கள் முன்போ உறுதிகளை நிறைவேற்றினால், அவை சட்டப்படி போலி உறுதிகளாகவே கருதப்படும் என சாய்ந்தமருது நொத்தாரிசுகள் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சாய்ந்தமருது பகுதியில் பலர் தமக்கு நொத்தாரிசு உரிமம் இல்லாதிருந்தும், தம்மை நொத்தாரிசு எனக் பொய்கூறி நம்ப வைத்தோ அல்லது நொத்தாரிசு கிளாக் என அடையாளப்படுத்தியோ சட்டவிரோதமாக உறுதிகளை நிறைவேற்றி வருகின்றனர். இவ்வாறான ஏமாற்றுப் பேர்வழிகள் பணத்தை உறிஞ்சும் நோக்கில் செய்யும் நடவடிக்கைகளால், பொதுமக்கள் தங்களின் சிறுகச் சிறுகச் சேர்த்த பெருந்தொகை பணத்தை வழங்கி வாங்கிய நிலங்களை சட்டப்படி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளில் சில அரசு ஊழியர்களும் ஈடுபட்டு வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நொத்தாரிசு பெயர் பலகை இல்லாத இடங்களில் உறுதிகளை எழுதுவது முற்றிலும் முறையற்றதும் சட்டவிரோதமானதும் ஆகும். உறுதி நிறைவேற்றப்படும் முன்னர், சம்பந்தப்பட்ட நபர் பிரசித்தி பெற்ற நொத்தாரிசாக அல்லது உரிமம் பெற்ற சட்டத்தரணியாக உள்ளாரா என்பதை பொதுமக்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இடைத்தரகர்கள் அல்லது எழுத்தர்களிடம் நேரடியாகப் பணத்தைக் கொடுத்து சான்றிதழ் அற்ற உறுதிகளைப் பெறுவதைத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் தங்களின் வாழ்நாள் சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் செயல்படுமாறு சாயந்தமருது பிரதேசப் பிரசித்தி பெற்ற நொத்தாரிசுகள் தங்களது கூட்டு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

No comments: