இலங்கைக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் ஓய்வு பெறவுள்ள உயர் இஸ்தானிகர் அவர்களை, நானும் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ப. சத்தியலிங்கம் அவர்களும் இன்றைய தினம் நேரில் சந்தித்து பயனுள்ள கலந்துரையாடலில் ஈடுபட்டோம்.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கையில் தனது பணிக்காலத்தில் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைக்காக அவருக்கு எமது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தோம்.
குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்வாதாரம், மனிதாபிமானத் தேவைகள், நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் நிலையான சமாதானத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் அவர் வழங்கிய ஒத்துழைப்பை நினைவுகூர்ந்தோம். அதேபோன்று, தமிழ் அரசியல் கட்சிகளுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை மேற்கொண்டு, தமிழர் மக்களின் அரசியல் மற்றும் மனித உரிமை சார்ந்த விடயங்களை கவனத்துடன் செவிமடுத்து, அவற்றை சர்வதேச மட்டத்தில் புரிந்துகொள்வதற்கான சூழலை உருவாக்க அவர் மேற்கொண்ட பங்களிப்பையும் பாராட்டினோம்.
மேலும், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய விடயங்களில் சுவிட்சர்லாந்து தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவிற்கும் எமது நன்றியை தெரிவித்தோம்.
அத்துடன், எதிர்காலத்திலும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், நீதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான அரசியல் தீர்வை நோக்கிய முயற்சிகளுக்கு சுவிட்சர்லாந்து அரசின் தொடர்ச்சியான ஒத்துழைப்பும் அக்கறையும் அவசியம் என்பதையும் வலியுறுத்தினோம்.
இறுதியாக, தனது எதிர்காலப் பணிகளிலும் தனிப்பட்ட வாழ்விலும் அனைத்து வெற்றிகளும் நலன்களும் கிட்ட எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்குமிடையிலான நட்புறவு மேலும் வலுப்பெற வேண்டும் என்ற எமது விருப்பத்தையும் பகிர்ந்துகொண்டோம்.
No comments: