News Just In

6/01/2026 01:49:00 PM

அதிமுகவுக்கு குட்பை சொல்ல போகிறாரா சி.வி.சண்முகம்?

அதிமுகவுக்கு குட்பை சொல்ல போகிறாரா சி.வி.சண்முகம்?





விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக கால் நூற்றாண்டு காலமாக அடையாளப்படுத்தப்பட்டவர் சி.வி.சண்முகம். எம்எல்ஏ, எம்.பி, அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு பொதுச் செயலாளர் பழனிசாமியின் காலத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்தார். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்ட படுதோல்வியால் பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம் போர்க்கொடி தூக்கினார்.

இவருடன் இணைந்து முதல்வர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் பழனிசாமியிடம் தஞ்சமடைந்தனர். ஆனால் சி.வி.சண்முகம் செல்லவில்லை.

தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என பழனிசாமியை சி.வி.சண்முகம் நிர்ப்பந்தித்துள்ளார்.

முதலில் இணைந்து செயல்படுங்கள், கட்சி பதவி குறித்து பின்னர் பேசிக்கொள்ளலாம் என பழனிசாமி கூறியதாகவும், உடன்பாடு எட்டப்படாததால் பழனிசாமியுடன் சி.வி.சண்முகம் இணைய முன்வரவில்லை என கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தை திடீர் திருப்பமாக பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பிடம் சி.வி.சண்முகம் நேற்று ஒப்படைத்துள்ளது பேசுபொருளாகி இருக்கிறது.

மயிலம் தொகுதியில் மக்களை சந்தித்து நன்றி தெவிக்கும் பணியை முடித்துக் கொண்டு ஓரிரு நாளில் சென்னை செல்கிறார். அவரிடம் எஸ்.பி. வேலுமணி மூலம் அதிமுக தலைமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என தெரிகிறது.

தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட செயலாளர் பதவியை ஒப்படைக்க வேண்டும் என்பதில் சி.வி.சண்முகம் உறுதியாக இருக்கிறார். இதில் உடன் பாடு எட்டப்படுமா என தெரியவில்லை. பதவி விவகாரத்தில் பழனிசாமியும் கறாராக இருக்கிறார்.

பதவி இல்லை என்றால் சி.வி.சண்முகம் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். அதிமுகவுக்கு குட்பை சொல்லிவிட்டு, தனது அரசியல் எதிர்காலத்தை தீர் மானிக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இவரது சாய்ஸ் தவெகவாக இருந்தால், ராஜினாமா செய்த எம்.பி பதவியை மீண்டும் கொடுத்து தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி வழங்குவதாக அமைச்சர் செங்கோட்டையன் மூலமாக காய்கள் நகர்த்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றாலும், அமைச்சர் பதவி சாத்தியம் இல்லை. திண்டிவனம் தொகுதியில் வெற்றிபெற்ற விசிகவைச் சேர்ந்த வன்னி அரசு சமூக நீதித்துறை அமைச்சராக இருப்பது காரணமாக கருதப்படுகிறது.

ஓரே மாவட்டத்தில் இரு அதிகார மையங்கள் இருந்தால் திமுக ஆட்சியில் பொன்முடி, மஸ்தான் இடையே ஏற்பட்ட சலசலப்பு தவெக ஆட்சியிலும் மீண்டும் ஏற்படலாம் என தவெக தலைமை யோசிக்கலாம் என கூறப்படுகிறது.

இல்லையென்றால் சிறிது காலத்துக்கு மவுனம் காக்கலாம். எனவே சி.வி.சண்முகத்தின் அடுத்தகட்ட நகர்வு என்பது தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments: