மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது 24 வயது மகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி வந்த 60 வயதுடைய தந்தையாரை நேற்று திங்கட்கிழமை (01) இரவு பாலியல் கொடுமை சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் கீழ் கைது செய்துள்ளதாக அந்த பிரதேசத்தைச் சேர்ந்த பொலிசார் தெரிவித்தனர் மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி க.பொ.தர உயர் தரத்தில் கல்வி கற்று வருகின்ற இவர் மீது இவரது தந்தையார் தொடர்ச்சியாக ஆபாசமாக பேசி வருவதாக பாதிக்கப்பட்ட யுவதி பொலிஸ் மா அதிபருக்கு இணையத்தளம் ஊடாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இருந்து குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிசார் மதுபானசாலை விற்பனை நிலையம் ஒன்றில் கடமையாற்றி வந்த குறித்த 60 வயதுடைய தந்தையாரை பொலிஸ் நிலையத்திற்கு சம்பவ தினமான நேற்று இரவு வரவழைத்து கைது செய்தனர். குறித்த யுவதியின் தந்தையார் தொடர்ச்சியாக ஆபாசமாக பேசி வருவதால் அவருடன் இருக்க முடியாது என முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை கைது செய்யப்பட்டவரின் கையடக்க தொலைபேசியை பரிசித்த போது அவர் ஆபாச படங்கள் வீடியோக்களை அதிகமாக தரை இறக்கம் செய்து வைத்திருந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து கைது செய்தவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்த பிரதேச பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: