
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடா பகுதியில், வீதியின் குறுக்கே அமைந்துள்ள வடிகானுக்குள் சிக்கிய நபர் ஒருவர், சுமார் இரண்டு மணித்தியால போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
நாவற்குடா கத்தாமரப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள பிரதான வீதி வடிகானுக்குள் நேற்று மாலை நபர் ஒருவர் நுழைந்துள்ளார்.
அவர் நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், காத்தான்குடி பொலிஸாருக்கும் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, இரவு 7.30 மணியளவில் அந்த நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மீட்கப்பட்டவர் அப்பகுதியைச் சேர்ந்தவர் என்றும், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினமே சிறையிலிருந்து விடுதலையானவர் என்றும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: