News Just In

4/15/2026 12:55:00 PM

தேர்தல் சரிவிலிருந்து மீள மக்களுடன் நெருக்கமான உறவு மிகவும் அவசியம் - சுமந்திரன் வலியுறுத்து

தேர்தல் சரிவிலிருந்து மீள மக்களுடன் நெருக்கமான உறவு மிகவும் அவசியம் - சுமந்திரன் வலியுறுத்து



கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட சரிவுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், நாம் மக்களுடன் இன்னும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது. என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று (14) உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கட்சியின் புதிய அலுவலகத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் நாடாவை வெட்டி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், உடுவில் பிரதேச சபை உறுப்பினர் தி. பிரகாஸ், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே. சயந்தன், ச. சுகிர்தன் மற்றும் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டதாவது:-

"கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் கட்சிக்கு ஏற்பட்ட சரிவுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், நாம் மக்களுடன் இன்னும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது. எமது அரசியல் இலக்கு என்பது சுயாட்சியை நோக்கிய ஒரே நேர்க்கோட்டுப் பாதையில் பயணிக்கின்றது. அதேவேளை, காலவோட்டத்தில் மக்களின் ஏனைய அடிப்படைத் தேவைகளையும் நாம் கவனிக்க வேண்டும்.

இளையவர்கள் வேலைவாய்ப்பின்றி வெளிநாடுகளுக்குச் செல்வது கவலையளிப்பதாகவும், அரசியல் இலக்குகளுடன் சேர்த்து இளையவர்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பிலும் கட்சி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தனது உரையில் தெரிவித்ததாவது:-

"இந்த அலுவலகம் மக்களின் குறைகளைக் கேட்கும் இடமாக மாத்திரமன்றி, மக்களுக்கும் எமக்கும் இடையிலான நேரடித் தொடர்பை வலுப்படுத்தும் பாலமாக அமையும். மக்களின் தேவைகளை ஒன்றிணைந்து, கூட்டுணர்வுடன் பூர்த்தி செய்வதே எமது எதிர்கால இலக்காகும். எமது கட்சியும் அந்த இலக்கை நோக்கியே பயணிக்கும்." - என்றார்.


No comments: