‘ஜனநாயகன்’ விவகாரத்தில் 6 பேர் கைது: சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியான அனைத்து இணையதளங்களையும் முடக்கி சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நடிப்பில், முன்னணி இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜனநாயகன். விஜய்யின் திரைப்பயணத்தில் இது கடைசிப் படம் என்பதால், உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக வேண்டிய இப்படம், தணிக்கை சிக்கல்களால் தள்ளிப்போனது.
நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, கடந்த மாதம் மறு தணிக்கைக் குழு படத்தை ஆய்வு செய்தது. விரைவில் தணிக்கைச் சான்றிதழ் பெற்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த வேளையில், ஜனநாயகன் திரைப்படத்தின் முழுப் பதிப்பும் இணையதளங்களில் சட்டவிரோதமாகக் கசிந்து, படக்குழுவினர் மட்டுமின்றி, தமிழ் சினிமா துறையையே அதிர்ச்சி அடையச் செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சைபர் க்ரைம் போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர்.
இணையதளம் முடக்கம்: முதல்கட்டமாக, படம் வெளியான அனைத்து இணையதள முகவரிகளையும் கண்டறிந்து, அவற்றை சைபர் க்ரைம் போலீஸார் தற்போது முடக்கியுள்ளனர். மேலும் இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தை இணையத்தில் வெளியிட்ட நபர்கள் யார்?
இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மாநில சைபர் கிரைம் போலீஸார் 6 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
No comments: