மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) ஏற்பாட்டில் கல்முனை பிராந்தியத்தைச் சேர்ந்த மீனவர்களுக்காக இலங்கையின் மீன்பிடித் துறை, மீனவர்களுக்கு நிலவும் சவால்கள் மற்றும் மீன்பிடி தொடர்பான சட்டங்கள் குறித்து விளக்கமளிக்கும் செயலமர்வு ஒன்று இன்று (11) கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்கள அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.
மீனவர்களின் தொழில் முன்னேற்றத்தையும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில், மீன்பிடி நடவடிக்கைகளில் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட விதிமுறைகள், கடல் வளங்களை பாதுகாக்கும் முறைகள் மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் தற்போதைய சவால்கள் குறித்து விரிவான விளக்கங்கள் கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்கள மாவட்ட காரியாலய உதவிப் பணிப்பாளர் ஆர். சி.குரூஸ் அவர்களால் வழங்கப்பட்டது.
மேலும், நிலைத்தன்மை வாய்ந்த மீன்பிடி நடைமுறைகள், கடல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் சட்டரீதியான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் அவசியம் ஆகியவை தொடர்பாகவும் மீனவர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்தியத்தைச் சேர்ந்த பல மீனவர்கள் கலந்து கொண்டு தங்களது தொழிலுடன் தொடர்புடைய சிக்கல்கள் மற்றும் தேவைகளை முன்வைத்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். அதிகாரிகளும் அதற்கு உரிய விளக்கங்களை வழங்கியதுடன், எதிர்காலத்தில் மீனவர்களின் நலனை முன்னிறுத்தும் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தனர்.
மீனவர்களின் விழிப்புணர்வை அதிகரித்து சட்டபூர்வமான மற்றும் நிலைத்தன்மை கொண்ட மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதே இச்செயலமர்வின் முக்கிய நோக்கமாகும்.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜே. யாட்சன் பிகிறாடோ அவர்களினால் மெசிடோ நிறுவனத்தின் வரலாறு மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கினார். மேலும் இந்நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திரு S.S. யாண்சன் மற்றும் உத்தியோகத்தர்கள், கடற்தொழில், நீரியல்வளங்கள் திணைக்கள மாவட்ட காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மொத்தத்தில், மீனவர்களின் விழிப்புணர்வை அதிகரித்து சட்டபூர்வமான மற்றும் நிலைத்தன்மை கொண்ட மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதே இச்செயலமர்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது. இது மீனவர்களின் தொழில் வளர்ச்சிக்கும் கடல் வளங்களின் பாதுகாப்புக்கும் முக்கிய பங்களிப்பாக அமையும் என கூறப்பட்டது
No comments: