
லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸை கொண்டு அண்மையில் தாக்குதல் நடத்தியதாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இயங்கி வரும் அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டுள்ள மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு (ஹெச்.ஆர்.டபிள்யூ) வைத்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
கடந்த வாரம் 3-ம் தேதி அன்று இஸ்ரேல் தரப்பு லெபனான் மீது நடத்திய தாக்குதலில் வெடி மருந்துகளில் வெள்ளை பாஸ்பரஸை பயன்படுத்தி இருந்ததாக ஹெச்.ஆர்.டபிள்யூ தெரிவித்துள்ளது. இது நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும், போர் குற்றம் என்றும் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
இதை புவியியல் சார்ந்த படங்கள் மூலம் சரிபார்த்து உறுதி செய்துள்ளதாக ஹெச்.ஆர்.டபிள்யூ தெரிவித்துள்ளது. காற்றில் வெள்ளை பாஸ்பரஸ் படிமங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள யோஹ்மோர் நகரில் நடந்துள்ளது. இதில் இரண்டு வீடுகள் மற்றும் ஒரு கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதை அணைக்கும் பணியில் உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள் ஈடுபட்டதாகவும் ஹெச்.ஆர்.டபிள்யூ கூறியுள்ளது.
ஆக்ஸிஜனுடன் வெள்ளை பாஸ்பரஸ் தொடர்பு கொள்ளும்போது தீ பற்றும் என தகவல். இது போர் களத்தில் புகைத்திரை மற்றும் இருள் கொண்ட வானை ஒளிரச் செய்யவும் பயன்படுத்தப்படும் என தகவல். இதனால் பயங்கரமான தீக்காயங்கள், சுவாசக்கோளாறு, உடல் உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. இது நச்சுத்தன்மை மிகுந்தது என தகவல்.
“குடியிருப்பு பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் வெள்ளை பாஸ்பரஸை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது சட்ட விரோதமானது. இது பொதுமக்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த வகை தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும், இஸ்ரேலுக்கு வெள்ளை பாஸ்பரஸ் கலந்த வெடிமருந்து மற்றும் ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவத்துக்கு விநியோகிக்கும் அரசுகள் அதைக் கைவிட வேண்டும். மேலும், குடியிருப்பு பகுதிகளில் இந்த தாக்குதல் கூடாது என இஸ்ரேலுக்கு அழுத்தம் தர வேண்டும்” என்று லெபனானை சேர்ந்த ஹெச்.ஆர்.டபிள்யூ ஆய்வாளர் ராம்ஸி கைஸ் கூறியுள்ளார்.
கடந்த 2024-ல் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இருப்பினும் அந்த நாட்டின் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல். கடந்த வாரம் ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் மேற்கொண்டது. தற்போது இது போராக மேற்கு ஆசியாவில் தொடர்கிறது.
இந்த சூழலில் லெபனான் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் உள்ள லித்தானி ஆற்றின் தெற்கு பகுதியில் வசித்து வரும் மக்கள் இடம் பெயர்ந்து செல்லுமாறு தொடர்ச்சியாக இஸ்ரேல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதி இஸ்ரேலின் வட திசை எல்லை பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது
No comments: