News Just In

3/08/2026 03:46:00 PM

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இப்தார் நிகழ்வும் அபிவிருத்தி கலந்துரையாடலும்

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இப்தார் நிகழ்வும் அபிவிருத்தி கலந்துரையாடலும்


கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வும், வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலும் கடந்த சனிக்கிழமை (07) வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வைத்தியசாலை அபிவிருத்திக் குழுத் தலைவர் இசட்.ஏ.எம். அஸ்மிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அத்துடன் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

மேலும் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் ஐ.எல்.எம். ரிபாஸ், பொது வைத்திய நிபுணர்கள் டாக்டர் எம்.என்.எம். சுஐப் மற்றும் டாக்டர் எம்.எம். வாஸித், தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம். றைஸ், மேட்ரன், நிர்வாக உத்தியோகத்தர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது வைத்தியசாலையில் காணப்படும் அவசிய தேவைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. முன்வைக்கப்பட்ட தேவைகள் தொடர்பாக உரிய கவனம் செலுத்தி அவற்றை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உறுதியளித்தனர்.

நிகழ்வின் இறுதியில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டன.


UMAR LEBBE NOORUL HUTHA UMAR

No comments: