
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து நோர்வே அரசு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
அத்துடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்ட விடயங்களில் வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் நோர்வே வலியுறுத்தியுள்ளது.
நோர்வே நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற விசேட விவாதத்தின் போதே நோர்வே வெளிவிவகார அமைச்சர் எஸ்பென் பார்த் ஐடே இதனைத் தெரிவித்தார்.
நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் கம்ஷாயினி குணரத்னம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது:-
"2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் இலங்கையில் ஒரு புதிய அரசியல் சூழலை உருவாக்கியுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு ஊழல் ஒழிப்பு, பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துதல் போன்ற வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. இந்த மாற்றங்களை நோர்வே வரவேற்கின்றது.
இருப்பினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றும் பல சவால்கள் நிலவுகின்றன என்பதை நாம் அறிவோம். குறிப்பாக நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்த தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. இது தொடர்பாக நாம் இலங்கை அரசுடன் நேரடியாகக் கலந்துரையாடி வருகின்றோம்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் செம்மணி உள்ளிட்ட பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான விசாரணைகள் நியாயமான முறையிலும், வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதில் நோர்வே உறுதியாக உள்ளது. உண்மை கண்டறியப்படும் போது மாத்திரமே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுத்தர முடியும்.
இலங்கையில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் தீர்மானங்களுக்கு நோர்வே தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றது.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் மற்றும் அதன் பின்னரான விசாரணைகள் குறித்தும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்.
இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நேர்மையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்." - என்றார்.
No comments: