
தன்னால் காப்பாற்றப்பட்டவர்கள் இப்போது எங்கேனும் இருப்பார்களாயின், அவர்கள் முன்வந்து செம்மணி குறித்த உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச அறிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர்பில் செம்மணி தொடர்பான விடயங்களை முன்வைக்குமாறு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணிகளிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“யாழ். அரியாலையில் 'சம்பத்' எனும் பெயரில் குறிப்பிடத்தக்களவு காலம் பணியாற்றியவன் என்ற ரீதியில், 1996 ஆம் ஆண்டிலே அரியாலை பிரதேசத்தில் காணாமல்போன சகல நபர்களும் 7 ஆவது இராணுவக் காலாட்படை தலைமையகத்தின் உயரதிகாரிகளினாலேயே கைதுசெய்யப்பட்டனர்.
1996 இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சகல குற்றங்கள் பற்றியும் வெளிப்படுத்த தயாராக உள்ளேன். அத்தோடு இவ்விடயங்கள் தொடர்பில் சத்தியக்கடதாசி வழங்கத் தயாராக உள்ளேன்.
7 ஆவது இராணுவக் காலாட்படை தலைமையகத்தில் பணிப்புறிந்த அதிகாரிகள் யார் என்பதையும், 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சகல குற்றங்கள் பற்றியும் வெளிப்படுத்துவதற்கு நான் தயாராக உள்ளேன்.
அண்மையில் கண்டறியப்பட்ட செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளில் சுமார் 150 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
1996 ஆம் ஆண்டளவில் யாழ். கைதடி பகுதியைச்சேர்ந்த இரண்டு பெண்கள் (அவர்களது பாதுகாப்புக்கருதி பெயர்கள் வெளியிடப்படவில்லை) செம்மணியில் கைதுசெய்யப்பட்டு, அன்றைய தினம் இரவு 7 ஆவது இராணுவக் காலாட்படை தலைமையகத்துக்குக் கொண்டுவரப்பட்டனர்.

இருப்பினும் அவர்கள் இருவரும் கொல்லப்படாத வகையில், செம்மணி சோதனைச்சாவடிக்கு அழைத்துச்சென்று, அங்கிருந்து அவர்களை விடுவிப்பதற்கு நான் உதவினேன். அதேபோன்று அரியாலை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட மற்றுமொரு பெண்ணையும்(பாதுகாப்புக்கருதி பெயர் குறிப்பிடப்படவில்லை) நான் தலையிட்டு விடுவித்தேன்.
இவ்வாறு என்னால் காப்பாற்றப்பட்டவர்கள் இப்போது எங்கேனும் இருப்பார்களாயின், அவர்கள் முன்வந்து அந்த உண்மைகளை வெளிப்படுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
அதுமாத்திரமன்றி அரியாலையைச் சேர்ந்த ஆண் ஒருவர் (பாதுகாப்புக்கருதி பெயர் குறிப்பிடப்படவில்லை) சுண்டி முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அச்சந்தர்ப்பத்திலும் நான் தலையிட்டு, அவரை விடுவித்தேன்” என்றார்.
No comments: