News Just In

5/31/2025 09:54:00 AM

பலாலி விமான நிலையத்தில் யாழ். திரும்பிய அகதி கைது - அரசிற்கு அதிகரிக்கும் அழுத்தம்!

பலாலி விமான நிலையத்தில் யாழ். திரும்பிய அகதி கைது - அரசிற்கு அதிகரிக்கும் அழுத்தம்



வெளிநாடு சென்ற தமிழர்களை நீங்கள் தானே திரும்பி வரச் சொல்கிறீர்கள்? உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைதா என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) எம்.பி. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த விடயத்தை மனோ கணேசன் எம்.பி. தனது எக்ஸ் (X) தளத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில் மேலும் தெரிவிக்கையில், ஊழல் பேர்வழிகளைக் கைது செய்து சிறையில் அடையுங்கள். அதைச் செய்யத் தான் வேண்டும்.

இன்னும் நூற்றுக்கணக்கான ஊழல் கோப்புகள் இருப்பதாகச் சொன்னீர்கள். அனைவரையும் கைது செய்து விசாரித்து ஆவன செய்யுங்கள்.

சட்டத்தில் இடமிருந்தால் ஊழல் பேர்வழிகளுக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்குங்கள். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால் எதற்காகத் தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வயோதிபம் அடைந்து உங்களை நம்பி நாடு திரும்பிய 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில் கைது செய்தீர்கள்?

அவரை இன்று பிணையில் வெளியே விடாமல் எதற்காக சிறையில் அடைக்கிறீர்கள்? வெளிநாடு சென்ற தமிழர்களை திரும்பி “வாங்கோ, வாங்கோ” என நீங்கள் தானே வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறீர்கள்?

உங்களை நம்பி வந்தால் திரும்பி வந்தால் விமான நிலையத்தில் கைது செய்வதா? சிவலோகநாதனுக்கு நாடு திரும்ப சென்னை இலங்கை துணை தூதரகம் தான் கடவுச்சீட்டு வழங்கி உள்ளது என்பது அரசுக்குத் தெரியாதா?

வெளிநாட்டு அமைச்சுக்கு தெரியாதா? தமிழக அரசின் காவல்துறை பாரத மத்திய அரசின் குடிவரவு குடியகல்வு வாரியம் என்பன ஒப்புதல் அளித்துள்ளன.

ஐ.நா. அகதிகள் ஆணைக்குழுஇ சிவலோகநாதனுக்குப் பயண சீட்டு வாங்கிக் கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து விமானமேற்றி அனுப்பி வைத்துள்ளது.

இவை உங்களுக்குத் தெரியாதா? வெளிநாடு சென்ற தமிழர்களை நீங்கள் தானே திரும்பி வரச் சொல்கிறீர்கள்? உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைதா? என்றுள்ளது.

No comments: