News Just In

12/31/2024 04:00:00 PM

தமிழரசு தலைநிமிர வேண்டும்! கஜேந்திரகுமார் வலியுறுத்து

தமிழரசு தலைநிமிர வேண்டும்! கஜேந்திரகுமார் வலியுறுத்து



இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை இழந்த பாதையைத் தொடர்கின்ற வகையில் கட்சியின் முடிவுகள், பதவிகள் அமையக்கூடாது என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“தமிழரசுக் கட்சி பிரதான கட்சியாக உள்ளமையால் அந்தக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பைச் சரியாகப் புரிந்துகொண்டு, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலரின் ஆதிக்கத்தைக் கட்சி தொடர்ந்தும் அனுமதிப்பதன் ஊடாகத் தொடர்ந்தும் ஒரு மோசமான கொள்கை ரீதியான பாதையில் தமிழ்த் தேசிய அரசியலைத் தள்ளும்.

ஒரு பொதுப்புள்ளியில் சந்திப்பதற்குத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிறீதரனுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம்.

அதேபோல் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.

இந்தப் பேச்சுகளை அடுத்த ஆண்டில் முன்கொண்டு செல்ல எதிர்பார்ப்பதாகவும் தமிழரசுக் கட்சி சரியான மாற்றங்களைச் செய்யுமானால் தமிழினத்துக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் ஒரு சுபீட்சமாக அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.

No comments: