
ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவி உயிரிழந்ததாக வெளியான செய்திகளை ஈரான் அரசு தொடர்புடைய ஊடகங்கள் மறுத்துள்ளன.
ஈரான் அரசு சார்பு முக்கிய ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, கமேனியின் மனைவி மன்சௌரே கோஜஸ்தே பகர்சாதே உயிருடன் இருப்பதாக தெரியவருகிறது.
முன்னதாக, கடந்த பெப்ரவரி 28 அன்று கமேனியின் இல்லத்தை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழி தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அந்த தாக்குதலில் காயமடைந்ததால் கமேனியின் மனைவி உயிரிழந்ததாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.ஆனால், அவை தவறான தகவல்கள் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “புரட்சித் தலைவர் கமேனியின் மனைவி உயிருடன் உள்ளார்; அவர் உயிரிழந்ததாக வெளியான ஆரம்ப செய்திகள் தவறானவை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், அவரது தற்போதைய உடல்நிலை குறித்து கூடுதல் தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதற்கு முன்பு, ஈரான் ஊடகங்களில் சிலர் தாக்குதலுக்குப் பிறகு அவர் கோமா நிலையில் இருந்ததாகவும் பின்னர் உயிரிழந்ததாகவும் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: