News Just In

7/16/2024 06:34:00 PM

ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்..!இரா .சாணக்கியன்





நேற்றைய தினம் சுவர்ணவாகினி ஊடகத்தில் பாடசாலை மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேள்விகளை எழுப்பும் நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்வில் ஒரு மாணவர் என்னிடம் “ஆசிரியர்களின் சம்பள உயர்வு பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?” எனும் கேள்வியினை எழுப்பினார். அதற்கு நான் கூறிய பதில் “எத்தனையோ ஆசிரியர்கள் உள்ளனர். என்னுடைய தொகுதியில் மாத்திரமே கிட்டத்தட்ட 42 km க்கும் அதிகமாக பயணம் செய்து பாடசாலைக்கு கற்பிக்கச் செல்லும் ஆசிரியர்கள் உள்ளனர். இதனால் அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் பயணம் மேற்கொள்வதற்கே போதுமானதாக இல்லை.

 மாணவர்களது எதிர்காலத்தினை கட்டியெழுப்புவதற்காக தங்களது சொந்தக் குடும்பத்தினை பார்ப்பதற்கு கூட நிதியற்ற நிலையில் உள்ளனர். ஆகவே ஆசிரியர்களின் சம்பள உயர்வு என்பது ஒரு நியாயமான கோரிக்கையாக உள்ளது. ஆரம்பத்தில் நடைபெற்ற போராட்டங்களின் போது ஆசிரியர்களுக்கான சம்பளத்தினை அதிகரிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்து இருந்தது. ஆனால் அதில் 2/3 பங்கு இன்னும் வழங்கப்படவில்லை. அரசியல் நாட்டில் போராட்டங்கள் இல்லாத சந்தர்ப்பங்களிலேயே அரசியல் முதலீடுகள் வரும். முதலீடுகளைக் கொண்டு நாட்டினைக் கட்டியெழுப்புவது என்றால் ஆசிரியர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் போன்ற பல்வேறு தரப்பினர்களுடைய பிரச்சனைகள் பற்றியும் அரசாங்கம் ஆராய வேண்டும். அரசாங்கத்திடம் ஆசிரியர்களின் சம்பள உயர்வுக்கு பணமில்லை என்றால் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் இன்று எமது மக்களின் வரிப்பணத்தை அநியாயமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

 எமது மாவட்டத்தில் அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறும் போது இராஜாங்க அமைச்சர்களைப் புகைப்படமெடுக்கவென அநேகர் வருகை தருகின்றனர். இவையனைத்தும் மக்களினுடைய வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் செயல்களாகவே உள்ளன. மக்களினுடைய வரிப்பணம் தேவையற்ற காரியங்களுக்குப் பயன்படுவது, நிதி மோசடிகள் நடைபெறுவது இன்று வரை நடைபெறுகின்றது. ஆசிரியர்களுக்கு இன்று வரை சம்பள உயர்வு வழங்கப்படாமல் நிராகரிக்கப்படுவது உண்மையில் அநீதியான ஒரு விடயமாக காணப்படுகின்றது.” எனப் பதிலளித்தேன்.

No comments: